பொய் பேசும் ராகுலை எங்க காணோம்? பா.ஜ., - எம்.பி., தர்மேந்திர பிரதான் கேள்வி!
பொய் பேசும் ராகுலை எங்க காணோம்? பா.ஜ., - எம்.பி., தர்மேந்திர பிரதான் கேள்வி!
UPDATED : ஆக 11, 2026 06:50 PM
ADDED : ஆக 11, 2026 06:33 PM

புதுடில்லி: 'தொடர்ந்து பொய் பேசும் பழக்கமுடைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ஜார்க்கண்டில் மாணவர்கள் போராட்டம் தொடர்பாக இதுவரை வாய் திறக்காதது ஏன்? பா.ஜ., ஆளும் மாநிலங்களில் ஏதாவது ஒரு சிறிய பிரச்னை என்றாலே வரிந்து கட்டிக்கொண்டு வரும் அவர், காங்., கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலத்தில் நடக்கும் பிரச்னையை பற்றி பேசாதது ஏன்?' என, முன்னாள் மத்திய கல்வி அமைச்சரும், பா.ஜ., - லோக்சபா எம்.பி.,யுமான தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பினார்.
முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்க்கண்டில், தேர்வு முறைகேடுகளை கண்டித்து, 18 நாட்களாக நுாற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் சட்டசபையை நோக்கி பேரணி செல்ல முயன்ற அவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
இது குறித்து, சமூக வலைதளத்தில், ஒடிஷாவின் சம்பல்பூர் தொகுதியின் பா.ஜ., -- எம்.பி., தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்ட பதிவு:
தொடர்ந்து பொய் பேசும் பழக்கமுடைய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பார்லி.,க்கு வரவோ அல்லது பதில்களை கேட்கவோ விரும்புவதில்லை. பொய்களை பரப்பவும், முதலைக்கண்ணீர் வடிக்கவும் மட்டுமே அவர் விரும்புகிறார்.
பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மீது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ராகுல் சுமத்துவது, அவரது விரக்தியையே காட்டுகிறது. வழக்கம் போல எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவர் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அவருக்கு இது ஒரு பழக்கமாகி விட்டது.
அனைத்து பிரச்னைகள் குறித்தும் பார்லி.,யில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், பார்லி.,யை வேண்டுமென்றே காங்., முடக்கி வருகிறது. இதன் மூலம் நாடு மற்றும் இளைஞர்களின் நலன்களை அக்கட்சி சிதைக்கிறது. காங்கிரசில், ஜனநாயகமும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்று தான். அக்கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கும் ஜார்க்கண்டில், தேர்வு முறைகேடுகளை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.
ஆனால், இது பற்றி ராகுல் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இதுவே, பா.ஜ., ஆளும் மாநிலங்களில் ஏதாவது ஒரு சிறிய பிரச்னை என்றால், மணிக்கொரு முறை செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஆதாரமின்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்துவார். அவரது இந்த இரட்டை வேடத்தை நாட்டின் இளைஞர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். இனியும் அவரால் இளைஞர்களை ஏமாற்ற முடியாது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
