விமான கட்டணத்தை ரூ.40,000 வரை உயர்த்த அனுமதித்தது யார்?: 'இண்டிகோ' விவகாரத்தில் ஐகோர்ட் கேள்வி
விமான கட்டணத்தை ரூ.40,000 வரை உயர்த்த அனுமதித்தது யார்?: 'இண்டிகோ' விவகாரத்தில் ஐகோர்ட் கேள்வி
ADDED : டிச 11, 2025 01:29 AM

புதுடில்லி: 'இண்டிகோ விமான நிறுவனத்தின் நெருக்கடியை பயன்படுத்தி, மற்ற நிறுவனங்கள் ஒரு வழி பயணத்துக்கு, 40,000 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தது எப்படி?' என, டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் துறையைச் சேர்ந்த 'இண்டிகோ' விமான நிறுவனம், நம் நாட்டில் அதிக விமான சேவைகளை வழங்கி வருகிறது. விமானி, விமானப் பணியாளர்களுக்கான பணி நேரம், விடுப்பு உள்ளிட்ட மத்திய அரசின் புதிய விதிகளுக்கு அந்நிறுவனம் இணங்காததால், கடந்த ஒரு வாரமாக அதன் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.
இதனால், நாடு முழுதும் ஆயிரக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியை பயன்படுத்திய மற்ற விமான நிறுவனங்கள், தங்கள் இஷ்டத்துக்கு விமான கட்டணத்தை உயர்த்தின.
பாதிப்பு
இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசு, விமான கட்டணங்களுக்கு புதிய உச்ச வரம்பை நிர்ணயித்தது. இண்டிகோ நெருக்கடி குறித்து, விமான போக்குவரத்து அமைச்சகம் விசாரித்து வருகிறது.
இண்டிகோ நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பயணியருக்கு நிவாரணம் வழங்கக்கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாய், நீதிபதி துஷார் ராவ் கெடேலா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
:
இண்டிகோ விவகாரம் மிகவும் தீவிரமான பிரச்னை. இதில், மத்திய அரசின் முயற்சிகளை பாராட்டுகிறோம். அதே சமயம், துவக்கத்திலேயே ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை; நிலைமை மோசமாக மத்திய அரசு அனுமதித்தது ஏன்?
இது, பயணியருக்கு தொந்தரவை ஏற்படுத்தியது மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது.
பாதிக்கப்பட்ட பயணியருக்கு உதவவும், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விமான கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்த நிலையில், மத்திய அரசு உரிய நேரத்தில் வழிகாட்டுதல்களை பிறப்பிக்காதது ஏன்?
மற்ற விமான நிறுவனங்கள் இந்த நெருக்கடியை பயன்படுத்தி, பயணியரிடம் இருந்து எப்படி அதிக கட்டணத்தை வசூலித்தன? 5,000- ரூபாய்க்கு கிடைத்த ஒரு வழி பயணத்துக்கான டிக்கெட் விலை, 30,000 - 40,000 ரூபாய் வரை உயர்ந்தது.
இப்படி ஒரு நெருக்கடி இருக்கும் போது, மற்ற விமான நிறுவனங்கள் எப்படி அதை பயன்படுத்தி லாபம் ஈட்ட முடியும்; இதற்கு அனுமதி அளித்தது யார்?
இவ்வாறு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
நோட்டீஸ்
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'விமானி, விமானப் பணியாளர்களின் பணி நேரம், விடுப்பு உள்ளிட்ட புதிய விதிகளுக்கு இண்டிகோ இணங்காததால் இந்த நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்டு அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், அந்நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது' என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட குழுவினரின் விசாரணை முடிந்தால், ஜன., 22ல், அது குறித்த அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டு, அன்றைய தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

