சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்: அமித்ஷா கேள்வி
சிதம்பரம் யாரை பாதுகாக்க விரும்புகிறார்: அமித்ஷா கேள்வி
UPDATED : ஜூலை 30, 2025 08:28 PM
ADDED : ஜூலை 30, 2025 08:02 PM

புதுடில்லி: '' பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதற்கான ஆதாரம் குறித்து சந்தேகம் எழுப்பும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், யாரை பாதுகாக்க விரும்புகிறார்? பாகிஸ்தானையா? லஷ்கர் இ தொய்பா அமைப்பையா? அல்லது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளையா? '' என ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பினார்.
என்ன காரணம்
ஆபரேஷன் சிந்தூர் மீதான விவாதம் குறித்து ராஜ்யசபாவில் நடந்த விவாதத்துக்கு பதிலளித்து அமித்ஷா பேசியதாவது: திங்கட்கிழமை, நமது பாதுகாப்பு படைகள் 'ஆபரேஷன் மகாதேவ்' நடத்தி, பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். இதற்காக பலரும் எனக்கு செய்தி அனுப்பி வருகின்றனர். நேற்று காங்கிரஸ் பேசும் போது, பயங்கரவாதிகளை நேற்றைய தினம் கொன்றது ஏன் என கேள்வி எழுப்பியது. அவர்களை நேற்று ஏன் கொல்லக்கூடாது. ராகுல் நேற்று பேசுவதாக இருந்ததே காரணமா?
தாக்குதல்
என்னை ராஜினாமா செய்யச் சொல்லும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ஆபரேஷன் சிந்தூர் குறித்து கேள்வி எழுப்புகிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்பதற்கான ஆதாரங்கள் குறித்து தொடர்ந்து அவர் சந்தேகம் எழுப்புகிறார். யாரை அவர் பாதுகாக்க விரும்புகிறார் என கேள்வி எழுப்ப விரும்புகிறேன். பாகிஸ்தானையா? லஷ்கர் இ தொய்பாவையா? அல்லது பயங்கரவாதிகளையா ? அவருக்கு வெட்கமாக இல்லையா? கடவுளின் கருணையால், அவர் கேள்வி எழுப்பிய தினமன்று மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள், பயிற்சி தளங்கள், பயிற்சி மையங்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இதனை தங்கள் நாட்டின் மீதான தாக்குதலாக பாகிஸ்தான் கருதியது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, இந்தியாவில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. 9 ம் தேதி பாகிஸ்தானின் 11 பாதுகாப்பு தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அழித்தது. இதனால், பாகிஸ்தான் தாக்குதலில் இருந்து பின்வாங்கியது.
காங்கிரசால்
முன்பு பாகிஸ்தானிடம் நாம் ஆதாரங்களை மட்டும் வழங்கி வந்தோம். ஆனால் மோடி அரசு அவர்களுக்கு விமான தாக்குதல் மற்றும் சர்ஜிக்கல் ஸ்டிரைக் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. பயங்கரவாதம் குறித்து பாஜவை நோக்கி கேள்வி எழுப்ப காங்கிரசுக்கு உரிமை கிடையாது. காங்கிரசின் ஓட்டுவங்கி மற்றும் திருப்திபடுத்தும் அரசியல் காரணமாக, நாட்டில் பயங்கரவாதம் பரவியது.
பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், நேரு ஆட்சியில் 1960 களில் ஒரு தலைபட்சமாக போடப்பட்ட சிந்துநதிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வது என முடிவெடுத்தோம். இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை 24 மணி நேரத்தில் திருப்பி அனுப்பும் நடவடிக்கையை துவக்கினோம்.
முழு சுதந்திரம்
ஏப்.,30 ம் தேதி இந்திய படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். பாதுகாப்பு அமைச்சகமும், ஆயதப்படைகளும் கூட்டாக சேர்ந்து இலக்கு, திட்டம், இடம் மற்றும் தாக்குதலுக்கான நேரத்தை முடிவு செய்தன. நமது வீரர்கள் தாக்குதலை தைரியத்துடன் மேற்கொண்டனர். அவர்களின் வெற்றிக்கு நான் பாராட்டுகிறேன். மே 7 ம் தி பயங்கரவாதிகளின் 9 பயிற்சி தளங்கள் அழிக்கப்பட்டன. பாதுகாப்பு அமைச்சர் லோக்சபாவில் கூறியது போல் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்புகளில் தலைமயைகம் அழிக்கப்பட்டன. இது மோடி அரசாலும், படைகளின் தைரியத்தினாலும் சாத்தியமானது.
பாக் கெஞ்சல்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தீர்க்கமானது இல்லை என சிதம்பரம் சொல்கிறார். அவர் தற்போது இந்த அவையில் இல்லாவிட்டாலும் அவருக்கு பதிலளிக்க விரும்புகிறேன் . 1965மற்றும் 1971 ல் நடந்த போர் தீர்க்கமானதா? ஆமாம் என்றால் பயங்கரவாதம் பரவி வருவது ஏன்? எதிரிகள் பயப்படாத வரையிலும் திருந்தாத வரையிலும், முடிவு தீர்க்கமானதாக இருக்காது. இத்தனை ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவர்கள் பயப்படுவது ஏன்?
யாரின் வேண்டுகோளின் பேரிலும் போர் நிறுத்தம் ஏற்பட்டது என கேட்கின்றனர். யாரின் வேண்டுகோளுக்கு ஏற்பவும் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. பாகிஸ்தான் தான், நமது நாட்டு ராணுவ டிஜிஎம்ஓவை அழைத்து போரை நிறுத்தும்படி கெஞ்சியது. ஆரம்பம் முதல் நமது நோக்கம் போர் கிடையாது. பாகிஸ்தான் மக்களை துன்புறுத்துவது கிடையாது. பாகிஸ்தான் நிறுத்தினால், நாங்களும் நிறுத்துகிறோம் என்று பிரதமர் மோடி ஆரம்பத்திலேயே கூறினார். ஆனால், ராகுல் பிரச்னையை பெரிதுபடுத்த முயற்சிப்பதுடன் கேள்வி கேட்கிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

