டில்லி குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி டாக்டர் உமர் நபி யார்; வெளியான புதிய தகவல்கள்
டில்லி குண்டுவெடிப்பு சம்பவ சூத்திரதாரி டாக்டர் உமர் நபி யார்; வெளியான புதிய தகவல்கள்
ADDED : நவ 11, 2025 04:52 PM

புதுடில்லி: தலைநகர் டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியும், சந்தேக நபருமான டாக்டர் உமர் நபி பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
டில்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் வழக்கு விசாரணை சிபிஐயிடம் இருந்து, தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விட்டது. என்ஐஏ அதிகாரிகளும் தங்களின் முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந் நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் சூத்திரதாரியும், சந்தேக நபருமான டாக்டர் உமர் நபி பற்றி புதுப்புது தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம், ஜம்முகாஷ்மீர், ஹரியானா, உ.பி. ஆகிய 3 மாநில போலீசாரின் கூட்டு நடவடிக்கையில் மருத்துவர்கள் உள்பட 8 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலுடன் தொடர்பில் உள்ளவர் என்ற சந்தேகிக்கப்படும் உமர் நபி தான் டில்லியில் நேற்றைய குண்டுவெடிப்பின் போது வெடித்துச் சிதறிய வெள்ளை நிற காரை (கார் பதிவு எண் HR 26 CE 7674) ஓட்டி வந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
உமர் நபி, புல்வாமாவைச் சேர்ந்தவர். பிப்.24ம் தேதி 1989ம் ஆண்டு பிறந்தார். பரிதாபாத்தில் உள்ள அல்பலா (Alfalah) மருத்துவக் கல்லூரியில் பணி புரிந்தவர். அவருடன் அடில் அகமது ராதர், முஜாம்மில் ஷகீல் இருவரும் பணிபுரிந்துள்ளனர். இந்த 3 பேரும் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் டாக்டர்களாக பணியாற்றி இருக்கின்றனர்.
இந்த இரு மருத்துவர்கள்( அடில் அகமது ராதர், முஜாம்மில் ஷகீல்) தான் 2900 கிலோ அம்மோனியம் நைட்ரேட் மற்றும் வெடி பொருட்களை சேகரித்து வைத்திருந்ததாக சிக்கியவர்கள். உமர் நபி எங்கே சென்றார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. இவர் தான் குண்டுவெடிப்பு நிகழ்த்த பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டி வந்தவர் என்று புலனாய்வு அமைப்பினர் சந்தேகிக்கின்றனர்.
3 பேரும் ஒன்றாகவே இருந்து, வெள்ளை காலர் பயங்கரவாதம் (white color terrorism) என்ற பாணியில் குண்டுவெடிப்யை அரங்கேற்றி உள்ளனர், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் ஸ்லீப்பர் செல் ஆக இருந்ததுள்ளனர். கல்வி, சமூகத்தில் அந்தஸ்து மிக்க உத்தியோகம் மற்றும் பரோபகார (charitable) செயல்கள் மூலம் நிதியை திரட்டி உள்ளனர் என்பது விசாரணை அமைப்புகள் மூலம் உறுதிப் படுத்தப்பட்டு உள்ளது.
தற்போது உமர் நபி எங்கே உள்ளார் என்பது தெரியாத நிலையில் புல்வாமாவில் உள்ள அவரது வீட்டுக்கு புலனாய்வு அமைப்புகள் சென்றுள்ளனர். அங்குள்ள அவரின் 2 சகோதரர்களையும் நேற்று நள்ளிரவே விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் புல்வாமாவில் பெரிய அளவிலான விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
உமர் எம்டி படிப்பு முடித்தவர். அவருக்கு 2 சகோதரர்கள் உள்ளனர். அவர்களின் பெயங்ர் ஆஷிக் நபி மற்றும் ஜாஹோர் நபி. இவர்களுக்கு சபரீனா நபி என்ற சகோதரியும் உள்ளார். உமர் நபியின் தாயார் பெயர் ஷமிமா பனோ என்பதாகும்.
உமர் நபி குறித்து புல்வாமா மக்கள் கூறியதாவது;
புல்வாமாவில் உள்ள உமர் நபி வீட்டுக்கு அவர் வந்ததே இல்லை. அவரின் மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் மட்டுமே உள்ளனர். நேற்றிரவே இரு சகோதரர்களையும் விசாரணை அமைப்புகள் அழைத்துச் சென்றுவிட்டன. தாயார் இன்று (நவ.11) காலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். உமர் நபி மனைவி மட்டுமே இப்போது புல்வாமாவில் இருக்கும் வீட்டில் உள்ளார்.
இவ்வாறு ஊர் மக்கள் கூறி இருக்கின்றனர்.
உமர் முகமது மனைவி கூறுகையில், கடந்த வெள்ளிக்கிழமை நான் அவரிடம் கடைசியாக பேசினேன். அவர் தான் எங்களுக்கு போன் செய்து பேசினார். படிப்பு, தேர்வு, மருத்துவர் பணி என நிறைய வேலைகள் உள்ளன. உங்களை பலர் தேடிக் கொண்டு வந்து செல்கின்றனர். வீட்டுக்கு வந்துவிடுங்கள் என்று கூறினேன். பயமாக உள்ளது என்று சொன்னேன்.
அதைக் கேட்ட அவர் (உமர் நபி) 3 நாட்கள் கழித்து வீட்டுக்கு வந்துவிடுவேன் என்றார். ஆனால் ஏன் 3 நாட்கள் கழித்து வருகிறீர்கள், நாளைக்கு வந்துவிடுங்கள் என்று சொன்னேன். நாங்கள் செத்து விடுவோம், உங்களை யார், யாரோ எல்லாம் தேடி வருகின்றனர் என்று சொன்னேன்.
இவ்வாறு உமர் அகமது மனைவி கூறினார்.

