கட்சி மாறி ஓட்டளித்தது ஏன்? காங்., அதிருப்தியாளர்கள் விளக்கம்!
கட்சி மாறி ஓட்டளித்தது ஏன்? காங்., அதிருப்தியாளர்கள் விளக்கம்!
ADDED : மார் 03, 2024 01:18 AM

ஷிம்லா : தங்கள் மாநிலத்தைச் சாராதவர் என்பதால் தான், காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக, ராஜ்யசபா தேர்தலில் ஓட்டளித்ததாக, தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ஆறு எம்.எல்.ஏ.,க்கள் கூறியுள்ளனர். சோனியா போட்டியிட்டிருந்தால் நிலைமை மாறியிருக்கும் என, அவர்கள் கூறியுள்ளனர்.
தகுதி நீக்கம்
ஹிமாச்சல பிரதேசத்தில் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், ஆளுங்கட்சிக்கு பெரும்பான்மை இருந்தபோதும், பா.ஜ., வென்றது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி தோல்வியடைந்தார்.
காங்கிரசைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூன்று சுயேச்சைகள் கட்சி மாறி ஓட்டளித்ததால், பா.ஜ.,வின் ஹர்ஷ் மகாஜன் வென்றார். இவர் முன்பு காங்கிரசில் இருந்தவர்.
இதைத் தொடர்ந்து, கட்சி மாறி ஓட்டளித்த ஆறு எம்.எல்.ஏ.,க்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராஜிந்தர் ரானா கூறியுள்ளதாவது:
நாங்கள் எங்கள் மனசாட்சியின்படி ஓட்டளித்தோம். மாநிலத்தில் கட்சிக்காக உழைத்தவர்கள் யாரும் இல்லையா?
ஏன் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும். எங்கள் உணர்வுகளை முதல்வரும், கட்சித் தலைமையும் புரிந்து கொள்ளவில்லை.
சூழ்நிலை
ஒருவேளை, சோனியா இங்கு போட்டியிட்டிருந்தால், இதுபோன்ற முடிவையே எடுத்திருப்போமா என்று கேள்வி கேட்கின்றனர்.
அவர் கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்தவர். கட்சிக்கும், மாநிலத்துக்கும் அதிக சேவை செய்துள்ளார். அவர் போட்டியிட்டிருந்தால், இந்த சூழ்நிலை உருவாகியிருக்காது.
நாங்கள் மீண்டும் கட்சியில் சேருவதற்கு முதல்வர் சுகுவுடன் பேசி வருவதாக கூறுவது பொய். உண்மையில், ஒன்பதுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வெளியேறுவதற்கு தயாராகி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், ''கட்சியின், 80 சதவீத எம்.எல்.ஏ.,க்கள் ஒற்று மையாக உள்ளோம். மீதமுள்ள, 20 சதவீதம் பேர், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்,'' என, முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குறிப்பிட்டு உள்ளார்.

