ADDED : ஜன 29, 2024 07:34 AM

கதக்:''காங்கிரசாருக்கு காவிக்கொடி மீது, கோபம் ஏன்,'' என ஸ்ரீராமசேனா தலைவர் பிரமோத் முத்தாலிக் கேள்வி எழுப்பியுள்ளார்.
கதக்கில் நேற்று அவர் கூறியதாவது:
காங்கிரசாருக்கு காவி நிறம், தீயை போன்று தென்படுகிறது. ஹிந்து தர்மத்தின் கொடி மீது, காங்கிரசாருக்கு ஏன் இந்த கோபம். மாண்டியாவின் கெரகோடா கிராமத்தில் அனுமன் உருவம் பொறித்த காவிக்கொடியை நீக்கியதை, ஸ்ரீராமசேனா வன்மையாக கண்டிக்கிறது.
காவிக்கொடி ஏதோ ஒரு கட்சி அல்லது சங்கத்தை சார்ந்தது அல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும், நாட்டின் கொடியாகும். ஒருமித்த கருத்துடன் பறக்கவிட்ட கொடியாகும்.
காவி நிறம் தியாகம், கலாச்சாரம், செழிப்பின் அடையாளமாகும். காவி கொடி பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., கொடி அல்ல. தர்மத்தின் கொடியை மதிப்பதற்கு காங்கிசார் கற்று கொள்ள வேண்டும். பகைமை பாராட்டினால், ஹிந்து சமுதாயம் கொதித்தெழும்.
உங்களை எதிர்க்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், அவ்வப்போது இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன. காவிக்கொடியை அகற்றியது பெருங்குற்றம்.
அது மட்டுமின்றி, தடியடி நடத்தியுள்ளனர். மக்கள் கல்லெறிந்தனரா அல்லது தகராறு செய்தனரா. கொடியை அகற்றியதை எதிர்த்து போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது தடியடி நடத்தியது ஏன். யார் மீது தடியடி நடத்த வேண்டுமோ, அவர்கள் மீது நடத்துவது இல்லை.
அவுரங்கசீப் கட் அவுட் வைத்து, ஊர்வலம் நடத்திய போது சட்டம் நினைவுக்கு வரவில்லையா. ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தியதை கவனித்தால், காங்கிரசார் ராவணனின் மனநிலைக்கு வந்திருப்பது புரிகிறது.
கிராம பஞ்சாயத்து தலைவர், ஒருமித்த கருத்துடன், ஜாதி, மதம், கட்சிகளை தவிர்த்து ஒன்றாக கொடியேற்றிளார். பலரின் உழைப்பால் 108 அடி கம்பம் வைக்கப்பட்டது. ஓட்டுக்காக அமைச்சர் செலுவராயசுவாமி வாய்க்கு வந்தபடி பேசுகிறார். பொய் சொல்லி மக்களை திசை திருப்ப முயற்சிக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.