வளர்ச்சி பணிகள் செய்யாதது ஏன்? காங்கிரசுக்கு எடியூரப்பா கேள்வி
வளர்ச்சி பணிகள் செய்யாதது ஏன்? காங்கிரசுக்கு எடியூரப்பா கேள்வி
ADDED : பிப் 09, 2024 07:46 AM

தாவணகெரே: ''காங்கிரசார் வாக்குறுதி திட்டங்களை கூறி, ஆட்சிக்கு வந்தனர். அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. வளர்ச்சி பணிகளும் நடக்கவில்லை,'' என பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா குற்றம்சாட்டினார்.
தாவணகெரேவில் நேற்று அவர் கூறியதாவது:
அரசு பணத்தில் விளம்பரம் செய்து, ஊழல் சித்தராமையா அரசு, பொய் சொல்லி சிக்கிக்கொண்டது. மத்திய அரசிடம் இருந்து, நிதி வரவில்லை என, கூறி டில்லிக்கு சென்று, கர்நாடகாவின் மானத்தை வாங்கும் வேலையில் ஈடுபட்டனர்.
வறட்சி நிவாரணத்துக்கு, மத்திய அரசு 6,000 கோடி ரூபாய் நிதி வழங்கியது.
ஊழல் காங்கிரஸ் அரசுக்கு, லோக்சபா தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். நாட்டை பிரிக்க முற்படுவோரை மக்கள் துாக்கியெறிவர்.
லோக்சபா தேர்தலில், மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற, இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
நேற்று நடந்த, தாவணகெரே மாவட்ட பா.ஜ., தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு, எம்.பி., சித்தேஸ்வர் வரவில்லை என, தவறாக நினைக்காதீர்கள்.
அவருடன் தொலைபேசியில் பேசினேன். அவரே நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துங்கள் என, கூறினார். சித்தேஸ்வரை மதிப்புடன் பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

