UPDATED : பிப் 29, 2024 03:23 AM
ADDED : பிப் 28, 2024 11:49 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தி காரணமாக, தங்கள் கட்சிகளில் இருந்து விலகி, மாற்று கட்சிகளிலும் இணைந்து வருகின்றனர். அந்த வரிசையில் நேற்றைய தினம் ராஜினாமா செய்த சில கட்சித் தலைவர்கள் குறித்த விபரம்:
காங்., பிரமுகர் விலகல்!
மேற்கு வங்க காங்கிரசின் மூத்த தலைவர் கவுஸ்தவ் பாக்சி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இது தொடர்பாக, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் அக்கட்சியின் மாநில தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரிக்கும் ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “மேற்கு வங்க காங்.,குக்கு கட்சி தலைமை எவ்வித முக்கியத்துவமும் அளிப்பதில்லை. எனவே, என் தன்மானத்தை விட்டுக்கொடுப்பதில் சமரசம் செய்யமாட்டேன்; இதன் காரணமாக, காங்கிரசில் இருந்து விலகுகிறேன்.
''மேற்கு வங்கத்தில், மம்தா தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சியை அகற்ற, பா.ஜ.,வால் மட்டுமே முடியும். எனவே, நான் பா.ஜ.,வில் இணைய உள்ளேன்,” என்றார்.
காங்., தலைவர் ராஜினாமா!
இதேபோல் அசாம் காங்கிரசின் செயல் தலைவர் ரானா கோஸ்வாமி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.
முன்னாள் எம்.எல்.ஏ.,வாக இருந்த இவர், விரைவில் பா.ஜ.,வில் சேரப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்காக, புதுடில்லி சென்றுள்ள ரானா கோஸ்வாமி, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறுகையில், “காங்கிரசில் ரானா கோஸ்வாமி சக்தி வாய்ந்த தலைவர். அவர் பா.ஜ.,வில் இணையப் போவதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை. எனினும், எங்கள் கட்சியில் அவர் இணைந்தால், நாங்கள் வரவேற்போம்,” என்றார்.
ஜெகன் கட்சியிலும் பிளவு!
ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்., கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், ஓங்கோல் லோக்சபா தொகுதி எம்.பி.,யுமான ஸ்ரீனிவாசலு ரெட்டி, அக்கட்சியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைமையுடன் எவ்வித பூசலும் இல்லை. எனினும், சில தவிர்க்க முடியாத சூழல் காரணமாக கட்சியில் இருந்து விலகுகிறேன். எப்போதும் சுயமரியாதை முக்கியம் என கருதுகிறேன். இதற்காகவே நான் ராஜினாமா செய்கிறேன். எனினும், என் மகன் ராகவா ரெட்டி, ஓங்கோல் லோக்சபா தொகுதியில் போட்டியிடுவார்,” என்றார்.

