சிறுவனுக்கு பாலியல் தொல்லை மனைவி கைது; கணவர் எஸ்கேப்
சிறுவனுக்கு பாலியல் தொல்லை மனைவி கைது; கணவர் எஸ்கேப்
ADDED : ஏப் 23, 2025 02:38 AM

திருவனந்தபுரம்:கேரளாவில், கணவரின் உதவியுடன், 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, வீடியோ எடுத்து மிரட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே பி.பி.அங்காடியைச் சேர்ந்தவர் முகமது சாபிக், 40. இவரது மனைவி சத்தியபாமா, 35.
இருவரும் போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள். சத்தியபாமா, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை வீட்டுக்கு வரவழைத்து, பாலியல் இச்சைக்கு ஆளாக்கி, அதை கணவர் வாயிலாக வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
பின், அந்த வீடியோவை, சிறுவனின் பெற்றோருக்கு அனுப்பி வைப்பேன் எனக்கூறி, தொடர்ந்து சிறுவனுக்கு தொல்லை கொடுத்துள்ளார். சிறுவனின் செயல்பாட்டில் சந்தேகம் அடைந்து, பெற்றோர் விசாரித்தபோது, இந்த தகவல் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, சிறுவனின் பெற்றோர் புகாரின்படி, திரூர் போலீசார் விசாரித்து, போக்சோ வழக்கு பதிவு செய்து, சத்யபாமாவை கைது செய்தனர். தலைமறைவான முகமது சாபிக்கை போலீசார் தேடுகின்றனர்.

