'கணவரின் வருமான விபரங்களை ஆர்.டி.ஐ.,யில் மனைவி கோர முடியாது'
'கணவரின் வருமான விபரங்களை ஆர்.டி.ஐ.,யில் மனைவி கோர முடியாது'
ADDED : மே 04, 2026 01:02 AM

புதுடில்லி: ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கணவர் அல்லது மனைவியின் வருமான விபரங்களை கோர முடியாது என, டில்லி உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
தனிநபர் வருமான வரி விபரங்கள் என்பது பொது நலன் சார்ந்த விஷயம் அல்ல என்பதால், தார்மீக அடிப்படையில் அதை பகிர முடியாது என நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரும் வழக்கில், கணவரின் உண்மையான வருமானத்தை நிரூபிக்க, அவரது வருமான வரி தாக்கல் விபரங்களை, ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரியிருந்தார்.
கடந்த 2007 - 2008ம் நிதியாண்டுக்கான வருமான வரி விபரங்களை வழங்குமாறு மத்திய தக வல் ஆணையம், வருமான வரித் துறைக்கு கடந்த 2021ல் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, கணவர் தரப்பில் டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ், தகவல் அறியும் உரிமை சட்டப் பிரிவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற முந்தைய உத்தரவை சுட்டிக்காட்டி தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தனிநபரின் வருமானம் மற்றும் வரி விபரங்கள் என்பது சந்தேகமே இல்லாமல் அவரது அந்தரங்கம் சார்ந்தது. பெரிய அளவிலான பொது நலன் ஏதும் இல்லாத பட்சத்தில் விதிவிலக்கு அளிக்க, தகவல் அறியும் உரிமை சட்டப்பிரிவு 8(1)(ஜே) வழிவகுத்துள்ளது.
அரசு இயந்திரங்களின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவே, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் முக்கிய நோக்கம். தனிநபர்களின் அந்தரங்க தகவல்களை தோண்டி எடுப்பது அதன் நோக்கம் அல்ல.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவு சட்டப்படி செல்லத்தக்கது அல்ல என அதை ரத்து செய்த டில்லி உயர் நீதிமன்றம், சட்டப்பூர்வமான பிற வழிகளில் கணவரின் வருமானத்தை நிரூபிக்க மனைவிக்கு முழு உரிமை உண்டு என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது.
