ADDED : மார் 14, 2024 06:33 AM
பாகல்கோட் லோக்சபா தொகுதி, காங்கிரசின் பாதுகாப்புக் கோட்டையாக இருந்தது. கடந்த நான்கு தேர்தல்களில், வேட்பாளர்களை மாற்றியும் வெற்றி பெற முடியவில்லை. 1999 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் சார்பில் ஆர்.எஸ்.பாட்டீல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 தேர்தலில் பா.ஜ., வேட்பாளராக களமிறங்கிய கத்தி கவுடர், காங்கிரசின் ஆர்.எஸ்.பாட்டீலை தோற்கடித்து, பாகல்கோட்டில் தாமரை கொடியை பறக்கவிட்டார்.
கடந்த 2009 தேர்தலில், கத்திகவுடரை தோற்கடிக்கும் நோக்கில், ஜே.டி.பாட்டீலை காங்கிரஸ் களமிறங்கியது. ஆனால் அவராலும் வெற்றி பெற முடியவில்லை. 2019ல் மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் தலைவி வீணா காசப்பனவரை, காங்கிரஸ் வேட்பாளராக்கியது. நரேந்திர மோடி அலை வீசியதால், பா.ஜ., வேட்பாளர் கத்திகவுடர் வெற்றி பெற்றார்.
இம்முறை கத்திகவுடருக்கு, இன்னும் சீட் உறுதியாகவில்லை. பாகல்கோட் தொகுதியை, பா.ஜ.,விடம் இருந்து கைப்பற்ற வேண்டும் என, காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது. எனவே வலுவான வேட்பாளரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. வீணா காசப்பனவர், அஜய்குமார் சரநாயக், ஆனந்த் நாமேகவுடா ஆகியோர் பரிசீலனையில் உள்ளனர்.
