தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சாக்லேட் கனவை நனவாக்குமா இந்தியா?

சாக்லேட் கனவை நனவாக்குமா இந்தியா?

சாக்லேட் கனவை நனவாக்குமா இந்தியா?


ADDED : ஆக 08, 2025 07:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 07:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மேற்கு ஆப்ரிக்காவின் கோகோ உற்பத்தியை காலநிலை மாற்றம் பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனால், குறைந்து வரும் சாக்லேட் உற்பத்தியை, தன் காலமாக்கிக் கொள்ள இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால், நடைமுறை புறக்கணிப்பு, குறைந்த முதலீடு, காலத்துக்கு உதவாத கொள்கைகளால், 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கக்கூடிய, உலக சாக்லேட் தொழிலை மறுவடிவம் பெறச் செய்யக்கூடிய வாய்ப்பை இந்தியா பயன்படுத்துமா என்ற ஆதங்கமும் உள்ளது.

சப்ளை சிக்கல்

சாக்லேட் தயாரிப்புக்கு கோகோ சப்ளை செய்யும் நாடுகளில் பாதி, தற்போது சீட்டுக்கட்டு போல உற்பத்தி சரிவை சந்திக்கின்றன. உலகின் கோகோ தேவையில் 70 சதவீதம் அளவுக்கு சப்ளை செய்து வந்த மேற்கு ஆப்ரிக்க நாடுகள், இதுவரை காணாத நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.

சாக்லேட் அவசர நிலை

இந்த பேரழிவின் நிலவரத்தை சில தரவுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. உலக கோகோ உற்பத்தி 2023 - 24ல் 43.68 லட்சம் டன். இது, முந்தைய ஆண்டை விட 13 சதவீதம் சரிவு. தேவை சீராக உயரும் நிலையில், சப்ளை பற்றாக்குறை 4.94 லட்சம் டன். அதாவது, கடந்த 60 ஆண்டுகளில் அதிக பற்றாக்குறை.

சர்வதேச கோகோ விலை, நீண்ட காலமாக 1 டன் 2.18 லட்சம் ரூபாயாக இருந்தது, 2024 டிசம்பரில் 11.25 லட்சம் ரூபாய். இந்த ராக்கெட் வேக விலை உயர்வு, ஹர்ஷே முதல் நெஸ்லே வரை சாக்லேட் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களின், இயக்குநர் வாரிய கூட்டங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சில இடங்களில் கோகோவின் விலை, தங்கம் விலையை விட அதிகமாம்.

திணறும் நாடுகள்


கடந்த 20 ஆண்டுகளாக கோகோ உற்பத்தியில் திணறி வரும் உலக நாடுகள், மாறி வரும் பருவ நிலை பாதித்த பாரம்பரிய கோகோ விளைச்சல் பகுதிகளை பராமரிக்க முடியுமா என்ற கேள்வியை எதிர்கொண்டுள்ளன. உலகின் டாப் கோகோ உற்பத்தி நாடுகளான கானா, ஐவரி கோஸ்ட் பெரும் பாதிப்பை சந்திக்கின்றன.

வழக்கமான ஆண்டு உற்பத்தி 8 லட்சம் டன்னாக இருந்த கானாவில், 2023 - 24 சீசனில் உற்பத்தி 5.31 லட்சம் டன் மட்டுமே. இது, கடந்த 15 ஆண்டுகளாக காணாத வீழ்ச்சி. சராசரியாக 22.50 லட்சம் டன் கோகோ உற்பத்தி செய்த ஐவரி கோஸ்ட், தற்போது அதில் 20 சதவீத சரிவு கண்டு, 1.80 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது. உலக கோகோ உற்பத்தியில், இந்த இரண்டு நாடுகளின் பங்கு மட்டும் 60 சதவீதம்.

இதனால், கோகோ இருப்பு அபாயகரமான சரிவுக்கு சென்றுள்ளதால், வழக்கமாக 4 மாதங்களுக்கு தேவையான இருப்பு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அடுத்த இரண்டு மாதங்களுக்கே கோகோ இருப்பு உள்ளது.

கர்நாடகாவில் கோகோ


கர்நாடகாவின் நீண்ட மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்... உலகின் சாக்லேட் சப்ளையை காப்பாற்றக்கூடிய அடர்ந்த மரங்களுக்கு இடையே, நடக்கிறார் மூன்றாம் தலைமுறை கோகோ உற்பத்தி விவசாயி ஒருவர். ஐம்பது ஆண்டுகளாக பருவ மழை மற்றும் வறட்சியை கண்ட கோகோ மரங்களில், ராந்தல் விளக்கு போல பொன் நிறத்தில் கோகோ தொங் குவது கண்கொள்ளாக் காட்சி.

தன் அளவான கோகோ சாகுபடி, குடும்பத்தின் வாழ்வாதாரத்தை தாண்டி, குறிப்பிடத்தக்க வளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை முழுமையாக அவர் உணர்ந்திருக்கவில்லை. சாக்லேட் தொழிலில் முக்கிய காவலனாக இந்தியா எழும் என்பதை அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பதாக அதை எடுத்துக் கொள்ளலாம்.

அனைவரும் விரும்பும் சாக்லேட், விரைவில் கனவு காணும் பண்டமாகி விடாமல் இருக்க, கோகோ உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்தினால் நல்லது.

தகிக்க வைக்கும் காரணம்

குழந்தைகள் விரும்பி சுவைக்கும் சாக்லேட் மீது பெரும் தாக்குதல் நடத்துவது காலநிலை மாற்றமே. கோகோ உற்பத்திக்கு ஏற்ற வெப்பநிலை 18 - 21 டிகிரி முதல் 30 - 32 டிகிரி வரை. ஆனால், தற்போது ஐவரி கோஸ்ட், கானா, நைஜீரியா, கேமரூன் நாடுகளின் சராசரி வெப்பநிலை 10 டிகிரி உயர்ந்து, 41 டிகிரியாகி விட்டது. இதனால், அரை நுாற்றாண்டு வயது கொண்ட கோகோ மரங்களில் நோய் தாக்குதல் ஏற்பட்டு சாகுபடி பாதிக்கப்படுகிறது.
மழையோ பருவம் தவறி, முன்னதாகவோ அல்லது மிக தாமதமாகவோ பெய்கிறது. இதனால், விவசாயிகள் கையறு நிலைக்கு தள்ளப்படுகின்றனர். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் 32 டிகிரி வெப்பத்தை தாண்டும் நாட்கள் எண்ணிக்கை மேலும் 40 நாட்கள் உயரும் என்ற கணிப்புகள், கோகோ உற்பத்தியின் அளவு மற்றும் தரத்தை மேலும் பதம் பார்க்க காத்திருக்கின்றன. கடந்த 2023 - 24ல் மேற்கு ஆப்ரிக்காவில் தாண்டவமாடிய எல் நினோ காலநிலையால், அதிகபட்ச மழை, கொடூர வறட்சி என இரு துருவங்களை நாடுகள் சந்தித்தன. இதுவும் கோகோ உற்பத்தியை நிலையற்ற சூழலுக்கு தள்ளியது.



நோய் தாக்குதல் அதிகரிப்பு

காலநிலை மாற்றத்தால் பயிர்களில் நோய் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. பிளாக் போட் நோய் என்பது, அதிக வெப்பத்தை தொடர்ந்து, பெய்யும் மழையால் ஏற்படும் புழுக்கத்தில் உருவாகிறது. இது, 80 சதவீத பயிர்களை அழிக்கவல்லது. கோகோ ஸ்வாலன் ஷூட் வைரஸ் நோய், ஐவரி கோஸ்ட், கானா நாடுகளின் கோகோ உற்பத்தியில் 15 முதல் 50 சதவீத இழப்பை ஏற்படுத்துகிறது. - மினிமோல் ஜே.எஸ்., பேராசிரியர், கேரள வேளாண் பல்கலை



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us