ADDED : நவ 01, 2024 06:52 AM
இம்முறை ஐ.பி.எல்., லீக் - 2025 போட்டிகளில் கன்னடர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது. போட்டிகள் துவங்குவதற்கு முன்பு, விளையாட்டு வீரர்கள் ஏலம் விடப்படுவர்.
ஆர்.சி.பி., அணிக்கு இம்முறை வலுவான அணியை உருவாக்க, இதன் உரிமையாளர் திட்டமிட்டுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இம்முறை ஏலத்தில் கர்நாடக விளையாட்டு வீரர்களை அதிக எண்ணிக்கையில் சேர்க்கும்படி, மாநில அரசு நெருக்கடி கொடுக்கிறது. எனவே மெகா ஏலத்தில், கர்நாடக விளையாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கக் கூடும்.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான. ஆர்.சி.பி., அணியில் கர்நாடகத்தினரே அதிகமாக இருந்தனர். அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், அகில் பாலகிருஷ்ணா, வினய்குமார், மனீஷ் பான்டே, கருண் நாயர், ராபின் உத்தப்பா உள்ளிட்ட திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தனர். இப்போது கர்நாடக ஆட்டக்காரர்களை, ஆர்.சி.பி., புறக்கணிக்கிறது.
தற்போது பெங்களூரின் சின்னசாமி விளையாட்டு அரங்கில், ஆர்.சி.பி., அணியின் ஆட்டத்திறன் திருப்தியாக இல்லை. உள்ளூர் ஆட்டக்காரர்கள் இருந்திருந்தால், வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம். இது தெரிந்தும் கன்னடர்கள் அலட்சியப்படுத்துவதாக கிரிக்கெட் ரசிகர்கள் வருந்துகின்றனர்.

