16,000 அடி உயரத்தில் கழன்ற விமானத்தின் ஜன்னல் கதவு
16,000 அடி உயரத்தில் கழன்ற விமானத்தின் ஜன்னல் கதவு
ADDED : ஜன 07, 2024 12:47 AM

போர்ட்லேண்டு, அமெரிக்காவில், அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான, 'போயிங் 737 - 9 மேக்ஸ்' ரக விமானம், 16,000 அடி உயரத்தில் பறந்த போது, அதன் ஜன்னல் கதவு பெயர்ந்ததால், பயணியர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அந்த ரகத்தைச் சேர்ந்த அனைத்து விமானங்களின் சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான, போயிங் 737 - 9 விமானம், நேற்று முன்தினம் மாலை 5:07 மணிக்கு, போர்ட்லேண்டு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இதில், ஆறு விமான ஊழியர்கள் மற்றும் 174 பயணியர் இருந்தனர்.
விமானம், 16,000 அடி உயரத்தில் பறந்த போது, திடீரென விமானத்தின் ஜன்னல் கதவு பெயர்ந்தது.
மேலும், அதன் அருகிலிருந்த இருக்கை ஒன்றும் காற்றில் பறந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்து பயணியர் கூச்சலிட்டதை அடுத்து, விமான ஊழியர்கள் வந்தனர்.
இது குறித்து, விமானிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானிகள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, 5:26 மணி அளவில், புறப்பட்ட அதே விமான நிலையத்தில், விமானம் தரையிறங்கியது. இந்த சம்பவத்தால், பயணியருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து, போயிங் 737 - 9 ரகத்தைச் சேர்ந்த அனைத்து விமானங்களின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பென் மினிகுசி கூறுகையில், ''65 போயிங் 737 - 9 விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விமானத்திலும் முழு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆய்வு செய்யப்பட்டு, மீண்டும் சேவைக்கு அனுப்பப்படும்,'' என்றார்.