பெலகாவி அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண் இறப்பு
பெலகாவி அரசு மருத்துவமனையில் குழந்தை பிரசவித்த பெண் இறப்பு
ADDED : டிச 23, 2024 06:53 AM
பெலகாவி,: மாநிலத்தின் அரசு மருத்துவமனைகளில், குழந்தை பிரசவித்த பெண்கள் இறப்பது தொடர்கிறது. பெலகாவியில் நேற்று ஒருவர் உயிரிழந்தார்.
பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில், குழந்தை பிரசவித்த பெண்கள் அடுத்தடுத்து இறந்தனர். இரண்டே வாரங்களில் ஐந்து பெண்கள் இறந்ததால், பதற்றம் நிலவியது.
இதைத் தொடர்ந்து பெலகாவி, கலபுரகி, ராய்ச்சூரின் அரசு மருத்துவமனைகளிலும் குழந்தை பிரசவித்த பெண்கள் இறந்தனர்.
பல்லாரியில் பெண்களின் இறப்புக்கு, தரமற்ற ஐ.வி., குளுக்கோஸ் பயன்படுத்தியதே காரணம் என்பது, சுகாதாரத்துறை அதிகாரிகளின் விசாரணையில் தெரிந்தது.
இதுகுறித்து, பெலகாவி சட்டசபை கூட்டத்தொடரிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இடையே, காரசார விவாதம் நடந்தது.
இந்நிலையில் பெலகாவி அரசு மருத்துவமனையில், நேற்றும் ஒரு பெண் உயிரிழந்தார்.
ஹுக்கேரியின் கவுடவாடா கிராமத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான வைஷாலிக்கு, 20, நேற்று முன்தினம் பிரசவ வலி ஏற்பட்டது.
குடும்பத்தினர் அவரை பெலகாவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. நேற்று காலையில், வைஷாலிக்கு இதய வலி ஏற்பட்டு, இறந்துவிட்டார். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், அவர் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
'அவருக்கு என்ன மருந்து கொடுத்தனர் என்பது, எங்களுக்கு தெரிய வேண்டும். வைஷாலியின் இறப்புக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என, குடும்பத்தினர் போராட்டம் நடத்தினர்.
உயர் போலீஸ் அதிகாரிகள், மருத்துவமனைக்கு வந்து பார்வையிட்டனர். விசாரணையை துவக்கிஉள்ளனர்.