திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூ.1.25 கோடி சுருட்டிய பெண்
திருமணம் செய்வதாக ஏமாற்றி ரூ.1.25 கோடி சுருட்டிய பெண்
ADDED : டிச 24, 2024 01:22 AM

புதுடில்லி: விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த ஆண்களை குறிவைத்து, திருமணம் செய்வது போல நாடகமாடி, கோடி கணக்கில் சுருட்டிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
உத்தரகண்டைச் சேர்ந்த சீமா என்ற பெண், உத்தர பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை 2013ல் திருமணம் செய்தார். சில நாட்களுக்கு பின், கணவர் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் சீமா வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், 75 லட்சம் ரூபாய் அவருக்கு இழப்பீடாக கிடைத்தது. பணத்தை பெற்று அங்கிருந்து வெளியேறிய சீமா, ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை 2017ல் திருமணம் செய்தார்.
சில நாட்கள் அவருடன் குடும்பம் நடத்திய சீமா, பின் விவாகரத்து பெற்றார். இதில், 10 லட்சம் ரூபாய் சீமாவுக்கு கிடைத்தது. இதைஅடுத்து, ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சென்ற சீமா, அங்குள்ள தொழிலதிபர் ஒருவரை 2023ல் திருமணம் செய்தார்.
சில நாட்களுக்கு பின், வீட்டிலிருந்து 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, ரொக்கத்துடன் அவர் தலைமறைவானார். நகை, பணத்துடன் மனைவி காணாமல் போனது குறித்து, அவரது கணவர் போலீசில் புகார் அளித்தார்.
இதன்படி வழக்குப் பதிந்த போலீசார், ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்த சீமாவை கைது செய்தனர். விசாரணையில், வரன் தேடும் மேட்ரிமோனி இணையதளத்தில், விவாகரத்து பெற்ற அல்லது மனைவியை இழந்த வசதி படைத்த ஆண்களை குறிவைத்த சீமா, திருமணம் செய்வது போல நடித்து பணத்தை பறித்தது தெரிய வந்தது.
பல்வேறு மாநிலங்களில் பலரை திருமணம் செய்து, 1.25 கோடி ரூபாய்க்கும் மேல் சீமா மோசடி செய்தது தெரியவந்தது.