விவாகரத்தை எதிர்த்து 32 ஆண்டாக போராடும் பெண்: சுப்ரீம் கோர்ட் வேதனை
விவாகரத்தை எதிர்த்து 32 ஆண்டாக போராடும் பெண்: சுப்ரீம் கோர்ட் வேதனை
ADDED : செப் 04, 2024 05:37 AM

புதுடில்லி: தன் கணவருக்கு வழங்கப்பட்ட விவாகரத்தை எதிர்த்து, கர்நாடகாவைச் சேர்ந்த பெண், 32 ஆண்டுகளாக போராடி வருவதை உச்ச நீதிமன்றம் கனிவுடன் பரிசீலித்தது. அவருக்கு நீதித்துறை நடைமுறைகள் பெரும் அநீதியை இழைத்துள்ளதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த தம்பதிக்கு, 1991ல் திருமணம் நடந்தது. அதற்கடுத்த ஆண்டு அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன்பின், அந்த கணவர், மனைவியை விட்டு பிரிந்து சென்றார். அதே நேரத்தில் அவருக்கு சொந்தமான அந்த வீட்டில், அவருடைய தாய், மனைவி மற்றும் ஆண் குழந்தை வசித்து வருகின்றனர்.
விவாகரத்து கேட்டு அந்த கணவர், குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் விவாகரத்து வழங்கப்பட்டது. முதலில், 2006ல் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மனைவி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேல்முறையீடு
இந்த விவகாரத்தை பரிசீலனை செய்யும்படி, குடும்ப நல நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வாறு மூன்று முறை குடும்ப நல நீதிமன்றத்தால் விவாகரத்து வழங்கப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது.
மேலும், ஒருமுறை நிவாரணமாக, குடும்ப நல நீதிமன்றம் நிர்ணயித்த, 25 லட்சம் ரூபாயை, 20 லட்சம் ரூபாயாக மாற்றியது. இதை எதிர்த்து அந்தப் பெண், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த், உஜ்ஜல் புய்யான் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அமர்வு கூறியுள்ளதாவது:
திருமணமாகி ஓராண்டுக்கு மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். கடந்த 32 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இதனால், இருவருக்கும் இடையே தற்போது சமரசம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. அதனால், விவாகரத்து வழங்கியதை உறுதி செய்கிறோம்.
அதே நேரத்தில், இந்த வழக்கில், நீதித்துறை நடைமுறைகளால் இந்தப் பெண்ணுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. குடும்ப நல நீதிமன்றம் முறையாக விசாரிக்காமல், கணவருக்கு சாதகமாகவே மூன்று முறை தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த ஆணின் தாயும், இந்தப் பெண்ணுடன் வசித்து வருகிறார்.
தன் மகனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். இதில் இருந்து, இந்த விஷயத்தில், தவறு எந்தப் பக்கம் உள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால், குடும்ப நல நீதிமன்றம் அவற்றை கவனிக்கவில்லை. தனக்கு பிறந்த மகனின் கல்வி உள்ளிட்டவற்றுக்கும் அவர் எந்தச் செலவும் செய்யவில்லை. அதைப் பற்றி கவலையும் படவில்லை.
இழப்பீடு
இதனால், விவாகரத்தை உறுதி செய்யும் அதே நேரத்தில், அந்தப் பெண்ணுக்கு, 30 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அவர் வழங்க வேண்டும். அதுவும், 2006ல் இருந்து 7 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டும். மேலும், தற்போது, இந்தப் பெண் வசித்து வரும் வீட்டின் உரிமையையும் அவருக்கே வழங்க வேண்டும். அதில், கணவர் எந்த உரிமையும் கோர முடியாது.
அதுபோல, கணவருக்கு வேறு ஏதாவது சொத்துக்கள் இருந்தால், அதை வேறு யாருக்காவது மாற்றியிருந்தாலும், அதில், அவருடைய மகனுக்கும் உரிமை உள்ளது. மூன்று மாதங்களுக்குள், இழப்பீட்டு தொகையை வழங்காவிட்டால், விவாகரத்து செல்லாது. மேலும் அவர் மீது சட்டத்துக்கு உட்பட்டு உரிய நடவடிக்கைகளை, குடும்ப நல நீதிமன்றம் எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.