அல் - குவைதா உடன் தொடர்புள்ள பெண் பெங்களூரில் கைது
அல் - குவைதா உடன் தொடர்புள்ள பெண் பெங்களூரில் கைது
ADDED : ஜூலை 31, 2025 12:31 AM

பெங்களூரு: அல் - குவைதா அமைப்புடன் தொடர்பில் இருந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.
அல் - குவைதா பயங்கர வாத அமைப்புடன் தொடர்பில் இருந்த நான்கு பேரை, குஜராத் மாநில பயங்கரவாத தடுப்பு படையினர், கடந்த 22ம் தேதி கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஷாமா பர்வீன், 30, என்ற பெண்ணுக்கும் அல் -குவைதா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதனால், ஷாமா பர்வீனை பற்றி, பயங்கரவாத தடுப்பு படையினர் தகவல் திரட்டினர்.
அவர், பெங்களூரு ஆர்.டி.நகர் மனோரா யனபாளையாவில் வசிப்பது தெரிந்தது.
இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பெங்களூரு வந்த, குஜராத் பயங்கரவாத தடுப்பு படையினர், பெங்களூரு போலீசார் உதவியுடன், மனோராயனபாளையாவில் தன் சகோதரருடன் வசித்த, ஷாமா பர்வீனை கைது செய்தனர்.
பட்டதாரியான ஷாமா பர்வீன், வேலைக்கு எதுவும் செல்லவில்லை. ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்யும் சகோதரருடன் வசித்தார். அல் - குவைதா அமைப்புடன் தொடர்பில் இருந்த ஷாமா பர்வீன், அந்த அமைப்பின் செயல்பாடுகள் அடங்கிய வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததுடன், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதும் தெரியவந்தது.
அவரிடம் இருந்து மொபைல் போன், மடிக்கணினி ஆகியவற்றை சிறப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். பெங்களூரு நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, குஜராத்துக்கு அழைத்து சென்றனர்.
அவருடன் யார், யார் தொடர்பில் இருந்தனர் என்பதை கண்டறியும் பணியில், பயங்கரவாத தடுப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

