‛‛சமதர்ம, மதச்சார்பற்ற '' வார்த்தைகளை நீக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு
‛‛சமதர்ம, மதச்சார்பற்ற '' வார்த்தைகளை நீக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ADDED : பிப் 09, 2024 07:09 PM

புதுடில்லி: அரசியல் சாசன முகவுரையில் சமதர்ம, மதச்சார்பற்ற என்ற இரு வார்த்தைகளை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் சில விளக்கங்களை கேட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, சீனியர் வழக்கறிஞர் விஷ்ணுசங்கர் ஜெயின் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு,
இந்திய அரசியல் சாசனத்தின் முகவுரையில், இந்தியாவை 'இறையாண்மை, ஜனநாயக குடியரசு' என்பதிலிருந்து 'இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு' என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த திருத்தம் 1976-ம் ஆண்டு 42-வது திருத்தத்தில் சமதர்மம், மதச்சார்பற்ற என்ற இரு வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளது. முகவுரையில் உள்ள வாசகங்களை திருத்தம் செய்ய முடியாது. ஆனால் அப்போதைய முன்னாள் பிரதமர் இந்திரா ஆட்சியில் நெருக்கடி நிலை பிரகடனத்தின் போது இந்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனை நீக்க வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறியுள்ளனர்
வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், நம் நாட்டின் அரசியல் அமைப்பு சாசனம் 1949-ம் ஆண்டு நவ. 26-ம் தேதியன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தேதியை வைத்துக்கொண்டு உன்னத நோக்கத்திற்காக, சேர்க்கப்பட்டதை முகவுரையில் திருத்தம் செய்ய முடியுமா ? முடியும் எனில் திருத்தலாம், அதில் பிரச்னை இல்லை. இதை விவாதிக்காமல் திருத்த முடியாது. இந்த வழக்கை பொறுத்தவரை விரிவான விவாதம் தேவை. இது தொடர்பாக ஏற்கனவே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையும் சேர்த்து அடுத்த விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

