கூட்ட நெரிசலுக்கு தீர்வு காண 'யாத்ரி சுவிதா கேந்திரா' எழும்பூர் உட்பட 76 ரயில் நிலையங்களில் அறிமுகம்
கூட்ட நெரிசலுக்கு தீர்வு காண 'யாத்ரி சுவிதா கேந்திரா' எழும்பூர் உட்பட 76 ரயில் நிலையங்களில் அறிமுகம்
UPDATED : அக் 25, 2025 02:38 AM
ADDED : அக் 25, 2025 02:34 AM

கூட்ட நெரிசல் மிகுந்த ரயில்வே ஸ்டேஷன்களில் பயணியரின் நடமாட்டத்தை எளிதாக்க, 'யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டத்தை ரயில்வே அமைச்சகம் செயல்படுத்த உள்ளது.
இதற்காக நாடு முழுதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 76 முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில், சென்னை எழும்பூர் நிலையமும் இடம்பெற்றுள்ளது.
பண்டிகை காலம் நாடு முழுதும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் எப்போதும் அலை மோதுவது வாடிக்கை. அதிலும், பண்டிகை காலங்களில் கட்டுக்கடங்காமல் போகிறது.
பயணியர் மட்டுமின்றி, வழியனுப்ப வந்தவர்கள், வியாபாரிகள், ரயில்வே ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் ரயில் நிலையத்தில் குவிவதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த பிரச்னைக்கு தீர்வு காண, 'யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற திட்டத்தை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்திருந்தார்.
பயணியர் நடமாட்டத்தை எளிதாக்குவதும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதும், ரயில் நிலையத்திற்குள் இதற்கான மேலாண்மையை மேம் படுத்துவதுமே இத் திட்டத்தின் நோக்கம்.
இந்த புதிய திட்டத்தின்படி, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருப்போருக்கு ரயில் நிலையங்களில் பிரத்யேக நுழைவு வாயில்கள் அமைக்கப்படும்.
இதன் மூலம், கூட்ட நெரிசலில் இருந்து பயணியரை காப்பதோடு, ரயில் நிலையத்திற்குள் சுமுகமான அணுகுமுறை உருவாக்கப்படும்.
இதற்காக, பயணியர் காத்திருப்பு அறை போதுமான பரப்பில் கட்டப்படும். அங்கிருந்து உரிய முறையில், பிளாட்பாரங்களுக்கு எளிதாக செல்வதற்கான வழி ஏற்படுத்தப்படும். இதற்காக, அந்த நிலையத்தின் அதிகாரப்பூர்வமற்ற வழிகள் அனைத்தும் அடைக்கப்படும்.
சரியா ன திட்டமிட லுடன் கூடிய தடுப்புகள் அமைக்கப்பட்டு, முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் உடைய பயணியர் மட்டுமே நேரடியாக பிளாட்பாரத்திற்கு செல்வர். அதுவரை, முன்பதிவு செய்யாத பயணியர், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் எல்லாம் வெளியில் காத்திருப்பர்.
அதிநவீன வசதி தவிர, தேவையான இடங்களில் மேம்பாலங்கள், அதிநவீன வசதிகளுடன் கூடிய, 'சிசிடிவி' கேமராக்கள், கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்படும்.
ரயில்வே ஒப்பந்ததாரர்கள், கடை வைத்திருப்போர், பிளாட்பார வியாபாரிகள், பணியாளர்கள் என அனைவருக்கும், புதிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.
அதிகாரப்பூர்வ அனுமதி உள்ளவர்கள் மட்டுமே பிளாட்பாரங்களில் நுழைய முடியும்.
இந்த திட்டம், நாட்டிலேயே முதன்முறையாக, புதுடில்லி ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக, 5,281 சதுர மீட்டர் பரப்பளவில் தனி பகுதி ஏற்படுத்தப்பட்டு, 22 டிக்கெட் கவுன்டர்கள், 25 தானியங்கி டிக்கெட் இயந்திரங்கள், 17 சிசிடிவி கேமராக்கள், ஐந்து லக்கேஜ் ஸ்கேனர்கள், 'வைபை' இன்டர் நெட் வசதி, 120 இருக்கைகள், 18 மின்விசிறிகள், ஆர்.ஓ., குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த, 'யாத்ரி சுவிதா கேந்திரா' திட்டத்தை நாடு முழுதும் விரிவுபடுத்தப்போவதாக, ரயில்வே அமை ச்சகம் அறிவித்துள்ளது. அதற்காக, பயணியர் வருகை அதிகம் உள்ள 76 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன.
அந்த பட்டியலில், மும்பை, ஹவுரா, பாட்னா, தர்பாங்கா, புவனேஸ்வர், டில்லி ஆனந்த் விகார், டில்லி நிஜாமுதீன், கான்பூர், மதுரா, ஆக்ரா, கோரக்பூர், குவஹாத்தி, செகந்திராபாத், திருப்பதி மற்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையங்கள் இடம் பெற்றுள்ளன.
- நமது டில்லி நிருபர் -

