ADDED : டிச 18, 2024 10:36 PM

பெங்களூரு; தன் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்ய கோரி, முன்னாள் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த மனு மீது இன்றும் விசாரணை நடைபெறுகிறது.
தன் மீது தொடரப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்யும்படி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பா மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு, நேற்று நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
எடியூரப்பா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டதாவது:
என் மனுதாரருக்கு 82 வயதாகிறது. அவர் மீது புகார் கூறிய சிறுமியின் தாயின் நடவடிக்கையை கவனிக்க வேண்டும். அவர், ஏற்கனவே அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், உறவினர்கள் மீது 56 புகார்களை பதிவு செய்துள்ளார்.
சம்பவம் நடந்து ஒன்றரை மாதங்களுக்கு பின், மார்ச் 14ம் தேதி வழக்குப் பதிவும்; சிறுமி வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
என் மனுதாரர், தகாத முறையில் தொட்டதாக, சிறுமி கூறியுள்ளார். சம்பவ தினத்தன்று அந்த இடத்தில் பலர் இருந்துள்ளனர். அவர்கள் முன்னிலையில் இச்சம்பவம் நடக்குமா?
'பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறுமி, எடியூரப்பா அறைக்கு செல்லவில்லை' என, சாட்சிகள் கூறியுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகள், மனுதாரரை சுற்றி இருக்கும்போது, இதுபோன்று தவறாக நடந்து கொள்ள முடியுமா? அன்றைய தினம், அழைப்பிதழ் கொடுப்பதற்காக வந்திருந்த சிவானந்த தகடூர், பரசிவய்யா உள்ளிட்ட சாட்சிகள், 'அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை' என்று கூறியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் ரவிவர்மகுமார் வாதிடுகையில், ''பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவத்தை முழுமையாக விவரித்துள்ளார். எடியூரப்பா, சிறுமியை அறைக்குள் அழைத்துள்ளார். சிறுமியின் தாய், 'நான் வரட்டுமா' என்று கேட்டபோது, 'வேண்டாம்' என்று எடியூரப்பா கூறியுள்ளார்.
''சிறிது நேரத்தில் சிறுமி அழுது கொண்டே, அறையிலிருந்து வெளியே வந்துள்ளார். நடந்த சம்பவம் பற்றி தாயிடம் சிறுமி கூறியுள்ளார்.
சிறுமியின் தாய், மீண்டும் எடியூரப்பாவை சந்தித்தபோது, தன் மகள் சொன்னதை பற்றி கேட்டுள்ளார். அதற்கு எடியூரப்பா, 'உன் மகளை சோதனை செய்தேன்' என்றதாக குறிப்பிடப்பட்டு உள்ளது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
படம்: எடியூரப்பா