ADDED : பிப் 04, 2026 04:28 AM

7,400 நக்சல்கள் கைது
லோக்சபாவில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:
உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் சவாலாக இருந்த இடதுசாரி தீவிரவாதம் சமீபகாலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2018ல் இந்த தீவிரவாதத்தால் 126 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2025 டிசம்பரில் எட்டு மாவட்டங்களாக குறைந்துள்ளன.
கடந்த 2019 முதல் 7,400 க்கும் அதிகமான நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; 5,880 பேர் சரணடைந்துள்ளனர். கடந்த ஆண்டு பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 364 நக்சல்கள் கொல்லப்பட்டனர்; 1,022 பேர் கைது செய்யப்பட்டனர்; 2,337 பேர் சரணடைந்துள்ளனர்.
இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொலைத்தொடர்பு இணைப்பை மேம்படுத்த, 9,233 மொபைல் போன் கோபுரங்கள் நிறுவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
உச்சம் தொட்ட யு.பி.ஐ., பரிவர்த்தனை
மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி ராஜ்யசபாவில் நேற்று பேசியதாவது:
இந்த நிதியாண்டில் டிசம்பர் வரையிலான காலத்தில், நாட்டில் யு.பி.ஐ., எனப்படும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை உச்சம் தொட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் 230 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஆன்லைன் பரிவர்த்தனை நடந்துள்ளது. முன்னதாக கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் இந்த பரிவர்த்தனை 139 கோடி ரூபாயாக இருந்ததை ஒப்பிடுகையில் இது அதிகம்.
நம் நாட்டுக்கு வெளியேயும் இந்த பணப்பரிமாற்றம் விரிவடைந்துள்ளது. பூடான், மொரீஷியஸ், பிரான்ஸ், நேபாளம், கத்தார், சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற எட்டு நாடுகளில் இந்த பணப்பரிமாற்றம் நடக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

