மீண்டும் காங்.,கில் இணைந்தார் யோகேஸ்வர்: கட்சிக்கொடி கொடுத்து வரவேற்றார் சிவகுமார்
மீண்டும் காங்.,கில் இணைந்தார் யோகேஸ்வர்: கட்சிக்கொடி கொடுத்து வரவேற்றார் சிவகுமார்
ADDED : அக் 23, 2024 11:04 PM

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமார் முன்னிலையில், பா.ஜ., முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வர் நேற்று மீண்டும் காங்கிரசில் இணைந்தார். அவரது முடிவை பா.ஜ., தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
ராம்நகரின் சென்னப்பட்டணா தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வேட்பாளராக, பா.ஜ., சார்பில் போட்டியிட அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.சி., யோகேஸ்வர் ஆசைப்பட்டார்.
ஆனால் ம.ஜ.த., தலைவரும், மத்திய கனரக தொழில் அமைச்சருமான குமாரசாமிக்கு, சென்னப்பட்டணாவை பா.ஜ.,வுக்கு விட்டுக்கொடுக்க மனம் இல்லை.
மகன் நிகில் அல்லது மனைவி அனிதாவை களம் இறக்க அவர் ஆசைப்பட்டார்.
ம.ஜ.த., சின்னத்தில் யோகேஸ்வர் போட்டியிடட்டும் என்று 'ஆபர்' கொடுத்தார். ஆனால் இதில் யோகேஸ்வருக்கு உடன்பாடு இல்லை.
'பி பார்ம்'
நேற்று முன்தினம் சென்னப்பட்டணா தொகுதி கூட்டணி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
பா.ஜ., தலைமை தனது பெயரை அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்புடன், யோகேஸ்வர் இருந்தார். ஆனால் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. அதே நேரம் தனக்கு சீட் கிடைக்காது என்பதும், யோகேஸ்வருக்கு தெரிந்துவிட்டது.
கர்நாடக பா.ஜ., தலைவர்கள் மீது அதிருப்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு கர்நாடக சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களை சந்தித்தார். தேர்தலில் போட்டியிட 'பி பார்ம்' வாங்கிக் கொண்டார்.
இந்நிலையில் யோகேஸ்வரை தொடர்பு கொண்டு, ராம்நகர், மாண்டியா மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் பேசினர். தங்கள் கட்சிக்கு வாரும்படி அழைப்பு விடுத்தனர். நீண்ட நேரம் நடந்த பேச்சு வெற்றிகரமாக முடிந்தது.
முதல்வரிடம் ஆசி
நேற்று காலை பெங்களூரு சதாசிவநகரில் உள்ள, துணை முதல்வர் சிவகுமார் வீட்டிற்கு யோகேஸ்வர் சென்றார்.
காங்கிரசில் இணைவது குறித்து பேச்சு நடத்தப்பட்டது. பின், வீட்டில் இருந்து தனது காரில் யோகேஸ்வரை, சிவகுமார் அழைத்துச் சென்றார்.
முதல்வரின் காவிரி இல்லத்திற்குச் சென்றனர். காங்கிரசில் இணைய யோகேஸ்வர் விருப்பம் தெரிவித்து, சித்தராமையா காலில் விழுந்து ஆசியும் பெற்றுள்ளார்.
பின், முதல்வரின் இல்லத்தில் இருந்து யோகேஸ்வரை, குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு, சிவகுமார் அழைத்துச் சென்றார். அவரது முன்னிலையில் காங்கிரசில் யோகேஸ்வர் இணைந்தார்.
கட்சிக் கொடி கொடுத்து அவர் வரவேற்கப்பட்டார்.