ADDED : பிப் 01, 2024 06:50 AM
பெலகாவி: தன்னை விட்டு பிரிந்த மனைவி மற்றும் அவரது காதலரை கொன்று விட்டு தப்பியோடிய கணவரை, போலீசார் தேடுகின்றனர்.
பெலகாவி, அதானியின், கொடகனுாரு கிராமத்தைச் சேர்ந்தவர் யாசின் பாகோடே, 21. இவரும் இதே கிராமத்தில் வசிக்கும் ஹீனா கவுசர், 19 என்ற பெண்ணும் பரஸ்பரம் காதலித்தனர்.
இதையறிந்த ஹீனா கவுசரின் பெற்றோர், நான்கு மாதங்களுக்கு முன் பலவந்தமாக தவுபிக் கியாடி, 24, என்பவருக்கு மகளை திருமணம் செய்து வைத்தனர்.
ஆனால், இவருடன் வாழ விரும்பாத ஹீனா கவுசர், திருமணமான சில நாட்களில், காதலர் யாசின் பாகோடேவுடன் ஊரை விட்டு ஓடினார். குடும்பத்தினர் இவர்களை தேடி பிடித்து, வீட்டுக்கு அழைத்து வந்தனர். ஊர் பெரியவர்கள் முன்னிலையில் சமாதான பேச்சு நடத்தினர்.
அப்போது ஹீனா, தவுபிக்குடன் வாழ தனக்கு விருப்பம் இல்லை. காதலர் யாசினுடன் தான் வாழ்வேன் என, பிடிவாதம் பிடித்தார்.
வேறு வழியின்றி ஊர் பெரியவர்கள், தவுபிக்குடன், ஹீனாவுக்கு நடந்த திருமணத்தை ரத்து செய்துவிட்டு, ஒரு மாதத்துக்கு முன், அவர் விரும்பியபடி யாசினை திருமணம் செய்து வைத்தனர். அதானியின், கொரனனுாரு கிராமத்தின் புறநகரில் பண்ணை வீட்டில் தம்பதி வசித்தனர்.
இதற்கிடையில், திருமணமாகி சிறப்பாக வாழ வேண்டும் என, கனவு கண்டிருந்த தவுபிக், தன் திருமணத்துக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்திருந்தார். மனைவி தன்னை ஒதுக்கி, வேறு திருமணம் செய்து கொண்டதை, தனக்கு நடந்த அவமதிப்பாக தவுபிக் நினைத்தார்.
திருமணமான சொற்ப நாட்களில், தன்னுடனான உறவை முறித்துக்கொண்டு, காதலரை திருமணம் செய்து, மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதை தவுபிக்கால் சகிக்க முடியவில்லை. இருவரையும் கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
இதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு, பண்ணை வீட்டில் நுழைந்த தவுபிக், இரும்புத்தடியால், ஹீனாவையும், யாசினையும் கடுமையாக தாக்கினார்.
தடுக்க வந்த யாசினின் தந்தை முஸ்தபா, தாய் ஆயினா பாய் பாகோடேவையும் தாக்கிவிட்டு தப்பியோடினார். இதில் யாசினும், ஹீனாவும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். காயமடைந்த தந்தையும், தாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
ஐகளி போலீசார், கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்துகின்றனர். தப்பியோடிய தவுபிக்கை தேடி வருகின்றனர்.