புத்தாண்டை வரவேற்று ஆட்டம் போதையில் மயங்கிய இளசுகள்
புத்தாண்டை வரவேற்று ஆட்டம் போதையில் மயங்கிய இளசுகள்
ADDED : ஜன 02, 2025 02:12 AM

பெங்களூரு, பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு இளசுகள் ஆட்டம் போட்டனர். அதிக போதையில் மயங்கிய இளம்பெண்களை, உடன் வந்த நண்பர்கள் துாக்கிச் சென்றனர்.
கர்நாடகாவில், பெங்களூரு எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு, சர்ச் தெரு உள்ளிட்ட இடங்களில் நேற்று முன்தினம் மாலை 6:00 மணியில் இருந்தே, புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டின.
மதுக்கூடம், பப்புகளுக்கு ஜோடிகளாக இளசுகள் வர ஆரம்பித்தனர். தங்களுக்கு பிடித்த மது வகைகளை வாங்கிக் குடித்துவிட்டு, டி.ஜே., பாடலுக்கு ஆட்டம் போட்டனர்.
ஒருகட்டத்தில் போதை தலைக்கு ஏறியதால், பெட்டிப் பாம்பாக அடங்கி இருக்கைகளில் விழுந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்ததும், பப், மதுக்கூடங்களில் இருந்து இளம்ஜோடிகளை வெளியேற்ற, போலீசார் சென்றனர். 'எங்களை ஏன் வெளியேற்ற முயற்சி செய்கிறீர்கள்?' என்று கேள்வி கேட்டு அவர்கள் தகராறு செய்தனர்.
அதிக போதையில் இருந்த இளம்பெண்கள் நடக்க முடியாமல் தள்ளாடினர். அவர்களை, உடன் வந்த நண்பர்கள் அலேக்காக துாக்கிச் சென்றனர்.

