ADDED : அக் 05, 2024 05:10 AM

'கறிவேப்பிலை சாப்பிட்டால் தலைமுடி நன்கு வளரும். கண்களுக்கு நல்லது. கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிடுங்கள்' என பெரியவர்கள் அறிவுரை கூறுவது உண்டு. ஆனாலும் பலரும், கறிவேப்பிலையை ஒதுக்கி வைப்பதை நாம் கண்கூடாக பார்த்திருப்போம்.
கறிவேப்பிலையை தனியாக சாப்பிட போர் அடிக்கிறதா? அப்படி என்றால் கறிவேப்பிலை சாதத்தை ஒருமுறை சாப்பிட்டுப் பார்க்கலாமே. லெமன் சாதம், புளியோதரை, தயிர் சாதம், தக்காளி சாதம் சாப்பிடுவோர் ஒரு மாற்றாக, கறிவேப்பிலை சாதத்தையும் சாப்பிட்டுப் பார்க்கலாம்.
குக்கரில் சாதம் தயார் செய்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, மிளகு ஒரு டீஸ்பூன், உளுந்து இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு இரண்டு டீஸ்பூன், துவரம் பருப்பு இரண்டு டீஸ்பூன் சேர்த்து நன்கு வதக்கவும்.
இரண்டு மிளகாய் வற்றல், தேவையான அளவு புளி சேர்த்துக் கொள்ள வேண்டும். தேவைப்படும் அளவு கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். நன்கு வதங்கிய பின் சூடு ஆறும் வரை தனியாக வைக்க வேண்டும். ஐந்து நிமிடங்கள் சூடு ஆறிய பின், மிக்சியில் அரைத்து பொடியாக்க வேண்டும். மீண்டும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, இரண்டு மிளகாய் வற்றல், தேவையான அளவு நிலக்கடலை, உளுந்து, வெங்காயம் போட்டு வதக்க வேண்டும்.
இதனுடன் அரைத்து வைத்திருந்த பவுடரை கலக்கி நன்கு வதக்குங்கள். தேவைப்படும் அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.
நன்றாக வதங்கிய பின் நல்லெண்ணெய் ஊற்றி நன்கு கிளறி விடவும். பின், முதலில் தயார் செய்து வைத்திருந்த சாதத்தைப் போட்டு, நன்கு கிளறி விடுங்கள். உப்பு தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளுங்கள். 10 நிமிடங்களில் கறிவேப்பிலை சாதம் ரெடி
. -- நமது நிருபர் - -