ADDED : ஜன 20, 2025 06:55 AM

ராம்நகர்: இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த பெண் பொறியாளர் உயிரிழந்தார்.
மாண்டியா மாவட்டம், மலவள்ளியின் பலேஹோன்னி கிராமத்தை சேர்ந்தவர் சரண்யா கவுடா, 25. பொறியாளரான இவர், கடந்த ஓராண்டாக, ராம்நகர் மாவட்டம், கனகபுராவின் சாத்தனுார் பஞ்சாயத்தில், 'நரேகா' திட்ட பொறியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். பசாபுரா கேட் அருகே வரும் போது, எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவர் மீது மோதியது.
இதில், கீழே விழுந்ததில், சரண்யா கவுடாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்தது. இதை பார்த்த அப்பகுதியினர், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சரியான வாகனம் கிடைக்கவில்லை. அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார்.
இது தொடர்பாக, ஹலகூரு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அவர்கள், அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி, சரண்யா கவுடாவின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சரண்யாவுக்கு அடுத்த மாதம் 16ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.