ADDED : ஜன 19, 2025 07:01 AM
ஷிவமொக்கா: முன்விரோதம் காரணமாக, இளைஞரை கொலை செய்த நால்வருக்கு ஆயுள் தண்டனை விதித்து, ஷிவமொக்கா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஷிவமொக்காவின் ஹொசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிக்ருல்லா, 28. இவர் 2022 மார்ச் 19ம் தேதி இரவு, ஷிவமொக்கா நகர் என்.டி.சாலையின், பலக் ஷாதி மஹல் அருகில், நண்பர்களுடன் பேசியபடி நின்றிருந்தார். அங்கு வந்த மர்ம கும்பல், ஜிக்ருல்லாவை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியது.
படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார்.
கொலை வழக்கு தொடர்பாக, விசாரணை நடத்திய தொட்டபேட் போலீசார், ஷஹபாஜ் ஷெரிப், 20, வசீம் அக்ரம், 20, காலா வசீம், 20, பயாஜ் உல்லா ரஹ்மான், 23, ஆகியோரை கைது செய்தனர்.
ஜிக்ருல்லாவை முன்விரோதம் காரணமாக, இவர்கள் கொலை செய்தது, விசாரணையில் தெரிய வந்தது. விசாரணையை முடித்த போலீசார், ஷிவமொக்கா நகரின் இரண்டாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
நால்வரின் குற்றம் உறுதியானதால், அனைவருக்கும் ஆயுள் தண்டனை, தலா 30,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று நீதிபதி பல்லவி தீர்ப்பளித்தார்.