மண்டல வாரியாக பட்ஜெட் தாக்கல் ; பெங்., மாநகராட்சி கமிஷனர் தகவல்
மண்டல வாரியாக பட்ஜெட் தாக்கல் ; பெங்., மாநகராட்சி கமிஷனர் தகவல்
ADDED : நவ 27, 2024 06:46 AM

பெங்களூரு,: ''அடுத்தாண்டு 2025 - 26ம் ஆண்டுக்கான மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இம்முறை மண்டலம் வாரியாக பட்ஜெட் தாக்கல் செய்ய ஆலோசிக்கப்படுகிறது,'' என, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்தார்.
கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில், 2020ம் ஆண்டுடன் மாநகராட்சி பதவிக்காலம் நிறைவடைந்தது. அதன்பின், 198 வார்டுகளை, 243 வார்டுகளாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, இறுதியில் 225 வார்டுகளாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடத்த வேண்டும் என்றும்; வார்டு எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும்; வார்டு பிரிப்பதில் தவறு உள்ளது எனவும் கருத்துகள் வெளியாகின. இதனால் தேர்தல் நடக்காமல், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக மாநகராட்சியே நிர்வகித்து, பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது.
இது தொடர்பாக, பெங்களூரில் மாநகராட்சி கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:
கடந்தாண்டு பட்ஜெட்டில், ஒவ்வொரு மண்டலத்துக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்று குறிப்பிடவில்லை. ஆனால், 2025ல் மண்டலம் வாரியாக, தனித்தனியாக பட்ஜெட் தாக்கல் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மண்டலம் வாரியாக வரும் வருவாயை பொருத்து, நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு தாக்கல் செய்தால், பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தங்கள் மண்டலத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தெரியும்.
பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட மெயின் சாலைகள், சர்வீஸ் சாலைகள் என 12,878.78 கி.மீ., சாலைகள் உள்ளன. இந்த சாலைகள் அறிவியல் பூர்வமாக, நவீன தொழில்நுட்பத்துடன் பராமரிக்கப்படும். நகரில் உள்ள சாலை பள்ளங்களை மூட, 700 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அடுத்தாண்டு ஜனவரி முதல் பள்ளங்கள் மூடும் பணிகள் துவங்கும். துவங்கிய 21 நாட்களில், பள்ளங்கள் இல்லா சாலையாக மாற்ற வேண்டும் என டெண்டரில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில், இதுவரை 3,500 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்குள், 500 கோடி ரூபாய் வசூலிக்க அதிகாரிகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வசூலிக்க தவறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.