மே 13, 2026 03:39 PM
மே 13, 2026 03:39 PM

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 'அடுத்து என்ன படிக்கலாம்?' என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பரவலாக எழுந்துள்ளது.
ஒரு மாணவர் எந்தப் பாடத்தில் அதிக ஈடுபாடு காட்டுகிறார் என்பதை முதலில் கவனிக்க வேண்டும். கணிதம், உயிரியல், கணினி தொழில்நுட்பம், கலை, மீடியா, வடிவமைப்பு போன்ற துறைகளில் மாணவர்களுக்கு இயல்பான ஆர்வம் இருக்கலாம். அந்த ஆர்வத்திற்கேற்ற படிப்பைத் தேர்வு செய்வது, எதிர்காலத்தில் வேலை திருப்திக்கும், தொழில் முன்னேற்றத்திற்கும் உதவும்.
திறமையை புரிந்துகொள்வதும் அவசியம்
ஆர்வம் மட்டுமல்லாமல், மாணவர்களின் திறமையையும் சரியாக மதிப்பிட வேண்டும். சில மாணவர்கள் கணிதத்தில் திறமையாக இருக்கலாம். சிலர் மொழித் திறன், படைப்பாற்றல் அல்லது நிர்வாகத் திறன்களில் சிறந்து விளங்கலாம். தங்களது இயல்பான திறமைகளை அடையாளம் காண்பது, சரியான தொழில் பாதையை தேர்வு செய்ய உதவும். ஒரு படிப்பை தேர்வு செய்வதற்கு முன், அந்தத் துறையில் எதிர்கால வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது அதிக வளர்ச்சி காணும் துறைகளில், ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் (ஏ.ஐ.,), டேட்டா சயின்ஸ், சைபர் செக்யூரிட்டி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், அனிமேஷன் மற்றும் கேம் டிசைன், ஹெல்த்கேர் போன்ற துறைகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. எனினும், தற்காலிக பிரபலத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு படிப்பைத் தேர்வு செய்வது சரியான அணுகுமுறை அல்ல. நீண்டகால ஆர்வம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
கல்லூரி தேர்விலும் கவனம்
படிப்பு மட்டுமல்லாமல், எந்தக் கல்லூரியில் படிக்கிறோம் என்பதும் முக்கிய அம்சம். கல்லூரியை தேர்வு செய்யும்முன் அங்கீகாரம், ஆசிரியர்களின் தரம், வளாக நேர்காணல், இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள், கட்டணம், உள்கட்டமைப்பு வசதிகள் போன்ற அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.
பெற்றோர்களுக்கும் பொறுப்பு
பல நேரங்களில் பெற்றோரின் எதிர்பார்ப்புகள் மாணவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் விருப்பம் மற்றும் திறமைகளை புரிந்துகொண்டு முடிவு எடுக்க உதவ வேண்டும். மேலும், பிற மாணவர்களுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும், மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது என்பதையும் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும் என்பது பெரும்பாலான கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
திறன் மேம்பாடு
இன்றைய வேலை சந்தையில் பட்டப்படிப்பு மட்டும் போதுமானதாக அல்ல. தொடர்புத்திறன், ஆங்கில அறிவு, கணினித் திறன், குழு ஒருங்கிணைப்பு, பிரச்னைகளை தீர்க்கும் திறன், ஹேக்கத்தான் மற்றும் இன்டர்ன்ஷிப் அனுபவம் போன்ற திறன்களுக்கும் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. எனவே, மாணவர்கள் படிப்புடன் சேர்த்து இதர திறன்களையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
