/
செய்திகள்
/
கல்விமலர்
/
கட்டுரைகள்
/
புதுமையாக யோசித்தால் எதிலும் சாதிக்க முடியும்
/
புதுமையாக யோசித்தால் எதிலும் சாதிக்க முடியும்
ஏப் 13, 2025 12:00 AM
ஏப் 13, 2025 12:00 AM

ஒரு இளைஞர் பிளஸ் 2 முடித்த பின், விமானத்தை வடிவமைக்க ஆசைப்பட்டார். வீட்டில், விமான மாதிரி படங்களை ஆர்வமாக வரைந்தார். பின், பி.எஸ்.சி., இயற்பியல் படித்தார். விமானம் உருவாக்குவது, அது பறப்பது தொடர்பான தகவல்களை ஆசிரியரிடம் கேட்டுக் கொண்டு இருந்தார்.
விமானம் தயாரிப்பதை தெரிந்து கொள்ள, 'ஏரோ நாட்டிக்கல்' பொறியியல் படித்திருக்கலாமே என, ஆசிரியர் சொன்னார். அப்படியா எனக்கேட்டுக் கொண்டு, பின்னர், பொறியியல் படித்தார்.
வழிகாட்டுதல் இல்லாமல் திசை மாறி சென்ற அந்த இளைஞன் தான், நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.
நானும் சிறு வயதில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். பொறியியல் படிப்பு முடிந்த பின், ரயில்வேயில் பணியில் சேர்ந்தேன். அங்கு நான் ஒரு புத்தகம் படிக்க நேர்ந்தது. ஒவ்வொரு பக்கமும் ஆச்சரியத்தை அளித்தது. இந்த புத்தகம் என்னை புரட்டி போட்டது.
அந்த புத்தகம் அப்துல் கலாம் எழுதிய, அக்னி சிறகுகள் தான். இந்த புத்தகத்தால் ஊக்குவிக்கப்பட்டு, நானும் விஞ்ஞானி ஆகி உள்ளேன். பாடத்திட்டங்களை தாண்டி, மாணவர்கள் அதிகம் வாசிக்க வேண்டும். படித்தால் பட்டம் கிடைக்கும்; வாசித்தால் வாழ்க்கை கிடைக்கும்.
இப்படிப்பட்ட புரிதல்கள் எளிதாக உங்களுக்கு கிடைக்கும் நோக்கில், ஒரே மேடையில், பல்வேறு படிப்புகள், எதிர்கால வாய்ப்புகள் குறித்து வழங்கி வரும் 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி.
புதுமையாக யோசிக்க வேண்டும் என்பது முக்கியமானது. இந்தியாவில், டி.ஆர்.டி.ஓ.,க்கு, 50 ஆய்வு கூடங்கள் உள்ளன. பாதுகாப்பு திட்டங்கள், ஆயுதங்கள், ராணுவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பொறியியல் மட்டுமல்ல, எந்த படிப்பை படித்தாலும் டி.ஆர்.டி.ஓ., வேலை வாய்ப்பு அளிக்கிறது. டி.ஆர்.டி.ஓ.,வில் புதிய கருவிகள், வாகனங்கள், உணவுகள் என, பல்வேறு புதுமைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தேசத்துக்கு தேவை என்றால், நாங்கள் எதையும் செய்வோம். இந்த தேசத்தின் வரிப்பணத்தில் படித்தவர்கள் நாங்கள்.
எந்த துறையாக இருந்தாலும் புதுமை செய்யுங்கள். புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ளுங்கள். அறிவும், ஆற்றலும், திறமையும், நேரமும் இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக இருக்கட்டும்.
எந்த பிரச்னைக்கான தீர்வும், சிறிய விஷயத்தில் கிடைக்கும். எனவே, தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். டி.ஆர்.டி.ஓ.,வில் சேர, பி.இ., - பி.டெக்., - எம்.இ., - எம்.டெக்., - எம்.எஸ்.சி., - எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள், எஸ்.இ.டி., எனப்படும் தேர்வை எழுதலாம்.
நேர்முக தேர்வுக்கு பின், ராணுவ கல்லுாரில் சேர்க்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும். இரவு பகலுமாக ஈடுபாடுகளுடன் உழைத்தால் மட்டுமே, விஞ்ஞானியாக முடியும். ராணுவ கல்லுாரி சார்பில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகின்றன. டி.ஆர்.டி.ஓ., சார்பிலும் பல்வேறு குறுகிய கால பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
நாட்டிலேயே தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில், பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் தொடர்பாக பல வாய்ப்புகள் உள்ளன.
எனவே, மத்திய அரசு, அந்தந்த மாநில அரசின் பங்களிப்போடு, பாதுகாப்பு தொழில் தடம் என்ற கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இதில், தொழிற்சாலைகள், ஆய்வு கூடங்கள் அதிகமாக உருவாக்கப்படும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் பெரிய வாய்ப்புகள் இருக்கின்றன.
தமிழகத்தில் ஏற்கனவே, 79 தொழில் நிறுவனங்கள், 4,727 கோடி ரூபாயை முதலீடு செய்து விட்டன. நீங்கள் படிப்பை முடித்து விட்டு தயாராக இருக்கும்போது, உங்களுக்கான வாய்ப்புகள் தயாராகி விடும்.
-டில்லிபாபு, ராணுவ விஞ்ஞானி, டி.ஆர்.டி.ஓ.,