மாணவர்களை மெருகேற்றும் நாடாளுமன்ற விவாதப் போட்டிகள்
மாணவர்களை மெருகேற்றும் நாடாளுமன்ற விவாதப் போட்டிகள்
நவ 17, 2011 12:00 AM
நவ 17, 2011 12:00 AM
நமது நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நடக்கையில், அவற்றைப் பார்க்க, பல கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்கள் வருவது வழக்கம். இந்த நாட்டின் உச்ச அதிகாரம் கொண்ட சட்டமியற்றும் அமைப்பின் செயல்பாடு மற்றும் அதன் உறுப்பினர்களுடைய வாதத் திறமையைக் காணும் ஆவலில் பல மாணவர்கள் வருவதுண்டு.
விவாதத் திறமை என்பது மிகவும் சிறப்பான ஒரு அம்சம். சிலருக்கு இது இயல்பிலேயே அமையப் பெற்றிருக்கும். சிலர் பயிற்சியின் மூலம் வளர்த்துக் கொள்வார்கள். இந்தியாவின் சில புகழ்பெற்ற கல்லூரிகள், மாணவர்களின் வாதத்திறனை வளர்க்க, நாடாளுமன்ற விவாதம் சார்ந்த போட்டிகளை நடத்துகின்றன.
முக்கிய கல்வி நிறுவனங்கள்
மாணவர்கள் குழுக்களாக இருந்து, இந்த விவாதத்தில் பங்கேற்பார்கள். இத்தகைய ஒரு போட்டியை முதன்முதலாக, டெல்லியிலுள்ள செயின்ட். ஸ்டீபன் கல்லூரி ஆரம்பித்தது. அந்தக் கல்லூரியின் முகர்ஜி நினைவு விவாதத்தை, நாடாளுமன்ற விவாதமாக கடந்த 1990களில் இக்கல்லூரி மாற்றியது. இன்று, இந்த நாடாளுமன்ற விவாதப் போட்டியானது, இந்தியாவில் பெரியளவில் வளர்ந்துள்ளது.
தற்போது, இந்தியாவின் சில புகழ்பெற்ற கல்லூரிகளான இந்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய சட்டப் பள்ளி(NLSIU), மேலாண்மை படிப்புகளுக்கான Narsee Monjee Institute, ஸ்ரீராம் வணிகக் கல்லூரி, பிட்ஸ் - பிலானி, எம்.எஸ். ராமையா தொழில்நுட்ப கல்லூரி, ஆர்.வி. பொறியியல் கல்லூரி மற்றும் இந்தியாவின் பல ஐ.ஐ.டி -கள், இத்தகைய நாடாளுமன்ற விவாதப் போட்டிகளில் பிரதானமாக பங்கேற்கும் கல்வி நிறுவனங்கள். இந்த கல்வி நிறுவனங்கள் தமக்கான மாணவர்கள் அணிகளை வைத்துள்ளன.
சிறந்த விவாதத் திறன்
இந்த வாதப் போட்டிகளின் மூலமாக மாணவர்களின் பேச்சு மற்றும் பகுப்பாய்வு திறன்கள் பெரியளவில் மேம்படுகின்றன. வாதத்திறன் என்பது, மிக அழகாக பேசுவது மட்டும்தான் என்பதல்ல. தனது கருத்துக்களை சரியான வரிசையில், தடையின்றி, ஓரளவு தெளிவான முறையில் வெளிப்படுத்துவதே சிறந்த பேச்சு என்பதில் அடங்கும். எதிராளி என்ன சொல்கிறார் மற்றும் அவரின் கருத்தாக்கம் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப சரியான மாற்று கருத்தை எடுத்து வைப்பதே சிறப்பான வாதம்.
சிலருக்கு பேசும்போதே கவித்துவம் சரளமாக வரும். அடுக்கு மொழியும், எதுகை மோனையும் மழையாகப் பொழியும். சிலரின் உச்சரிப்பு தெளிவாக இருக்கும். ஆனால் இந்த அம்சங்கள் எல்லாம் சிறப்பாக இருந்தால்தான் ஒருவர் சிறப்பான வாதம் செய்பவர் என்பதல்ல. மேலே சொன்ன அடிப்படை அம்சங்கள் இருந்தாலே போதும்.
சர்வதேச தொடர்புகள்
இந்த நாடாளுமன்ற விவாத குழுக்களை வைத்திருக்கும் கல்வி நிறுவனங்கள், சர்வதேச அளவில் தொடர்புகளையும் வைத்துள்ளன. இந்த நாடாளுமன்ற விவாதப் போட்டிகள், சர்வதேச அளவில் நடத்தப்படுகின்றன. பொதுவாக, இந்த (Parliamentary Debating - PD) விவாதப் போட்டிகள் கல்லூரி நிலையிலான மாணவர்களுக்கானது என்ற நிலை இருக்கையில், பெங்களூரில் பள்ளி மாணவர்களை இந்த பயிற்சியில் ஈடுபடுத்த NLSIU ஒரு திட்டம் தயாரித்துள்ளது.
மேலும், இந்த பயிற்சி திட்டத்தை டெல்லி பள்ளி மாணவர்கள் மத்தியிலும் செயல்படுத்த முனைந்துள்ளது. இதைத்தவிர, பள்ளி மாணவர்களுக்கிடையிலான முதல் நாடாளுமன்ற விவாதப் போட்டியை நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசிய நிலையிலான போட்டிகள்
ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகளில், பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். கடந்த பல வருடங்களாகவே இத்தகைய போட்டிகள் நடந்து வருகின்றன.
குறிப்பு
நாம் வாழும் உலகில், நமக்கு தெரியாமலேயே இதுபோன்ற பல போட்டிகள் நடந்து வருகின்றன மற்றும் பல பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. எனவே, மாணவர் சமூகம் தம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொண்டு, எத்தகைய சவால்களையும் முறியடிக்கும் வண்ணம், தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
