ஜன 20, 2012 12:00 AM
ஜன 20, 2012 12:00 AM
இன்றைய பொருளாதார மயமான உலகில், சட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் பெருமளவில் அதிகரித்துள்ளன. சட்டப் படிப்பை பல இளைஞர்கள் பெரிய விஷயமாக கருதும் நிலையில், பல கல்லூரிகள் ஒரே முறையையே கடைபிடிக்கின்றன. 5 வருட படிப்பில், 3 வருடங்கள், BA அல்லது B.Sc பட்டத்தை வழங்கி, 5 வருடங்கள் முடிந்த பிறகு, LLB பட்டத்தை வழங்குகின்றன. பல சட்டக் கல்லூரிகளில், பள்ளிப் படிப்பை முடித்து சேரும் மாணவர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பாக 20 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு, அகில இந்திய பொதுத்தேர்வு(Common Law Admission Test - CLAT)அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அதற்கு எதிர்ப்புகளும் உண்டு. இத்தேர்வில் 200 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படுகின்றன. English with comprehension, general knowledge, current affairs, elementary mathematics, legal aptitude and logical reasoning போன்றவை அத்தேர்வின் அம்சங்களாக உள்ளன. இந்த 2012ம் வருடத்தின் CLAT தேர்வானது வரும் மே 13ம் தேதி நடைபெறும்.
பிராக்டிகல் பயிற்சி
பொதுவாக, சட்டப் பள்ளிகள், Moot courts, mock trials, client negotiations போன்ற அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஏனெனில், இத்தகைய அம்சங்கள்தான் ஒரு வளரும் வழக்கறிஞர் தனது பகுப்பாய்வு மற்றும் வாதத் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான படிநிலைகள். இன்னொரு முக்கிய அம்சம் என்னவெனில், இன்டர்ன்ஷிப் எனப்படும் பயிற்சி திட்டம். ஒவ்வொரு செமஸ்டர் முடிந்த பிறகும், அனைத்து மாணவர்களும் இப்பயிற்சியில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அறிவு, நினைவுத்திறன் மற்றும் வகைப்படுத்தல் ஆகியவை அனைத்து சட்டப் பட்டதாரிகளுக்கும் இருக்க வேண்டிய முக்கியத் திறமைகளாகும்.
முந்தைய நாட்களைப் போலன்றி, புகழ்பெற்ற சட்டக் கல்லூரிகளில் படித்து வெளிவரும் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. அதுவும், இந்த தாராளமய பொருளாதார உலகில், Mergers and acquisitions, banking and finance, infrastructure contracts, debt restructuring, FEMA regulations, IPRs, corporate governance, private equity deals and WTO law போன்ற துறைகளுக்கான திறமைவாய்ந்த வழக்கறிஞர்களின் தேவை மிகவும் அதிகமாக உள்ளது. (இன்றைய மத்திய உள்துறை அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரம் போன்றவர்கள், இந்த கம்பெனி நிதி விவகாரங்களில் ஆலோசகர்களாக இருந்து ஏராளமாக சம்பாதித்துள்ளனர்). பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கம்பெனிகள் ஆகிய இரண்டிலும் மேற்கூறியது தொடர்பாக அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன.
அதேசமயம், சட்டப்படிப்பு என்பது நிதி துறையில்தான் நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் என்று நினைத்துவிடக்கூடாது. நிதித்துறையை விரும்பாத சட்டப் பட்டதாரிகளுக்கு சுற்றுசூழல் மற்றும் மனித உரிமை விஷயங்களில் அதிக வாய்ப்புகள் உள்ளன. CSE, ICRC and UNHCR போன்ற நிறுவனங்கள் அதற்கு சிறந்த உதாரணங்கள்.
வாய்ப்புகள்
Clifford chance, Allen & Overy, Herbert smith and Simmons போன்ற புகழ்பெற்ற சட்ட நிறுவனங்கள், உலகம் முழுவதுமுள்ள தங்களுடைய பலவிதமான அலுவலகங்களில் சட்ட வல்லுநர்களை நியமனம் செய்ய, சட்டப் பட்டதாரிகளைத் தேடி, இந்திய சட்டப் பள்ளிகளுக்கு வருகை புரிகின்றன. சட்டப் பட்டதாரிகளுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்காது என்றிருந்தது அந்த காலம். ஆனால், தேசிய சட்டப் பள்ளிகள் அந்த நிலையை இன்று மாற்றிவிட்டன. எனவே, அதிகம் சம்பாதிக்க நினைக்கும் இளைஞர்களும், சட்டப் படிப்பை பற்றி சிந்திக்கும் காலம் கனிந்துவிட்டது.
திறமைகள்
அறிவு, நினைவுத்திறன் மற்றும் வகைப்படுத்தல் திறனோடு, விரைவாகவும், தர்க்கரீதியாகவும் சிந்தித்தல் மற்றும் விடாமுயற்சி மனப்பான்மையும் கட்டாயம் வேண்டும். ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலான சட்டப் பட்டதாரிகள், தங்களது படிப்பை முடித்து சில ஆண்டுகள், ஏதேனுமொரு மூத்த வழக்கறிஞரிடம் உதவியாளர்களாக பணிபுரிகின்றனர். அதன்மூலமே, தங்களுடைய அனுபவ அறிவை வளர்த்துக் கொள்கின்றனர். ஒரு தொழில்முறை சட்ட நிறுவனத்தில் ஒருவர் சேர்கையில், ஆரம்ப சில வருடங்கள், மிகவும் சோர்வூட்டுவதாகவும், அலுப்பூட்டுவதாகவும் இருக்கும்.
சில சட்ட வல்லுநர்கள் சொல்வது என்னவெனில், "சட்டம் பயிலும் மாணவர்கள், அதை அதிக பொருளீட்டுவதற்கான ஒரு அம்சமாக நினைக்காமல், மக்களுக்கு நீதியைப் பெற்று தருவதற்கான சிறந்த கருவியாகவே பாவிக்க வேண்டும்" என்பதுதான்.
