நீதிமன்றங்களுக்கு வெளியே தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதிகளை பயன்படுத்தலாம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யோசனை
நீதிமன்றங்களுக்கு வெளியே தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதிகளை பயன்படுத்தலாம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யோசனை
UPDATED : ஏப் 27, 2026 10:30 AM
ADDED : ஏப் 27, 2026 10:31 AM
ஜெய்ப்பூர்:
“நீதிமன்றங்களுக்கு வெளியே வழக்குகளை தீர்க்கும் மாற்றுத் தீர்வு முறைகளில், ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக தேசிய அளவிலான பதிவேடு ஒன்றை உருவாக்க வேண்டும்,” என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கான மாநாட்டில், தலைமை நீதிபதி சூர்யகாந்த் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியுள்ளதாவது:
மத்தியஸ்தம், லோக் அதாலத், சமரசம் மற்றும் நடுவர் மன்றம் ஆகியவை நீதி பெறுவதற்கான மாற்று வழிகள் மட்டுமல்ல; அவை கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நீதி கிடைப்பதற்கான ஒரே கதவு. மக்கள் புரிந்து கொள்ளும் மொழியில், துரிதமாக வழங்கப்படும் நீதியே உண்மையான நீதி.
நீதிபதிகள் ஓய்வு பெற்ற பின் அவர்களின் அனுபவம் பயன்படுத்தப்படாமல் போவது நாட்டிற்கு பெரும் இழப்பு.
எனவே, நீதிமன்றங்களுக்கு வெளியே வழக்குகளை தீர்க்கும் மாற்றுத் தீர்வு முறைகளில், ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக தேசிய அளவிலான பதிவேடு ஒன்றை உருவாக்க வேண்டும்.
முதலாவதாக, வணிகம் மற்றும் குடும்ப ரீதியான சிக்கல்களில் நடுநிலையுடன் தீர்வு காணும் மத்தியஸ்தர்களாக இவர்களின் பங்களிப்பை பெறலாம்.
இரண்டாவதாக, சட்ட கல்வியாளர்களாக, பள்ளி, கல்லுாரிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் சாமானிய மக்களுக்கு சட்ட உரிமைகள் குறித்து எளிய மொழியில் எடுத்துரைக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு பிரச்னை நீதிமன்ற வழக்காக மாறும் முன்பே, மாவட்ட மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கி இவர்களால் சமரசம் செய்ய முடியும்.
அடுத்த தலைமுறை வழக்கறிஞர்களுக்கும், மத்தியஸ்தர்களுக்கும் வழிகாட்டும் ஆலோசகர்களாகவும் இவர்களால் செயல்பட முடியும்.
சுருக்கமாக சொல்வதென்றால், மழைக்காலத்தில் நீரை சேமித்து, வறட்சி காலத்தில் உதவும் உறை கிணறுகளை போன்றவர்களே ஓய்வு பெற்ற நீதிபதிகள்.
பாலைவனத்தில் தேங்கி இருக்கும் நீர் எவ்வளவு உயர்ந்ததோ, அதே போல, இவர்களின் அனுபவமும் விலை மதிப்பற்றது.
இவ்வாறு அவர் பேசினார்.

