இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; கனடா பிரதமர் மார்க் கார்னி தகவல்
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு; கனடா பிரதமர் மார்க் கார்னி தகவல்
UPDATED : மே 26, 2026 01:52 PM
ADDED : மே 26, 2026 01:53 PM
ஒட்டாவா:
இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சு நடத்தி வருகிறோம் என கனடா பிரதமர் மார்க் கார்னி தகவல் தெரிவித்தார்.
இந்தியா - கனடா இடையே வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு முதலீட்டு வாய்ப்புகள் குறித்துப் பேசுவதற்காக, மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக கனடாவுக்கு மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்றுள்ளார். அவருடன் 100க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் உடன் சென்றுள்ளனர்.
கனடா சென்ற பியூஷ் கோயல் அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து இருதரப்பு குறித்து உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறியிருப்பதாவது:
நாங்கள் இந்தியாவுடன் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்துப் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். கனடா தொழிலாளர்களுக்கும், வணிகங்களுக்கும் இது ஒரு திருப்புமுனையாக அமையும்.
நாங்கள் மிகத் துரிதமாகச் செயல்பட்டு வருகிறோம். இது வரை எட்டியுள்ள முன்னேற்றங்களை ஆய்வு செய்யவும், எரிசக்தி, வேளாண் உணவு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகிய துறைகளில் நம் இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து இந்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேச்சு நடத்தினேன். இவ்வாறு மார்க் கார்னி கூறியுள்ளார்.
அதே போல் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கனடா பிரதமரைச் சந்தித்து, பிரதமர் மோடியின் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். இந்தியா - கனடா உறவில் ஒரு புதிய உத்வேகத்தையும், கனடா பிரதமரின் அண்மைய இந்தியப் பயணத்தை நான் அன்புடன் நினைவு கூர்ந்தேன்.
இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தி தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனை நடத்தினோம். இவ்வாறு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
