மத்திய அரசின் நிதியை பெற டில்லிக்கு செல்லவும் தயார்: பள்ளி கல்வி அமைச்சர் தகவல்
மத்திய அரசின் நிதியை பெற டில்லிக்கு செல்லவும் தயார்: பள்ளி கல்வி அமைச்சர் தகவல்
UPDATED : ஜூன் 05, 2026 12:13 PM
ADDED : ஜூன் 05, 2026 12:14 PM
சென்னை:
“கல்விக்கான மத்திய அரசின் நிதியை பெற தொடர்ந்து முயற்சிப்போம். தேவையெனில் டில்லி சென்று, அதிகாரிகளுடன் பேசுவோம்,” என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னை, அரும்பாக்கம், சி.எம்.டி.ஏ., குடியிருப்பு அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்குதல், 'ஸ்மார்ட்' வகுப்பறை திறப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடந்தது.
அதில் பங்கேற்ற பின், அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பேட்டி:
தனியார் பள்ளிகள், தாங்கள் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என கூறி உள்ளோம்.
ஏற்கனவே, பள்ளிகள் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, இடைத்தரகர்கள், அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக்கலாம்; இனி அது போல் நடக்காது.
ஒற்றைச் சாளர முறையில் வெளிப்படையாக நடவடிக்கைகள் தொடரும் என்பதால், பள்ளிகளும் தங்களுக்கு உரிய கட்டண விபரங்களை தெரிவிக்க வேண்டும்; அவ்வாறு செய்யாத பள்ளிகள் பற்றிய புகார்கள் வந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர்களையும், சங்கங்களையும் பழி வாங்குவதற்காக போடப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்களின் கோரிக்கைகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கல்விக்கான மத்திய அரசின் நிதியை பெற தொடர்ந்து முயற்சிப்போம். தேவையெனில் டில்லி சென்று, அதிகாரிகளுடன் பேசுவோம். அதற்காக, இருமொழிக் கொள்கையிலிருந்து பின்வாங்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
