கடல் தாமரை நுாலகம் பூஜை அறைக்கு சமமானது ஆன்மிக எழுத்தாளர் சுவாமிநாதன் நெகிழ்ச்சி
கடல் தாமரை நுாலகம் பூஜை அறைக்கு சமமானது ஆன்மிக எழுத்தாளர் சுவாமிநாதன் நெகிழ்ச்சி
UPDATED : மார் 30, 2026 06:54 PM
ADDED : மார் 30, 2026 06:56 PM
பெங்களூரு:
அயராத உழைப்பின் அடையாளமாக, 'தினமலர்' திகழ்வதாகவும், கடல் தாமரை புத்தக பூங்கா நுாலகம் வீட்டின் பூஜை அறைக்கு சமமானது எனவும், பிரபல ஆன்மிக எழுத்தாளர் சுவாமிநாதன் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள, 'தினமலர்' அலுவலகத்தின் கடல் தாமரை புத்தக பூங்காவுக்கு பிரபல ஆன்மிக எழுத்தாளர் சுவாமிநாதன், 61 நேற்று வந்தார். நுாலகத்தில் உள்ள அந்துமணி பதில்கள், வரலாறு தொடர்பான புத்தகங்களை ஆர்வமாக பார்த்தார்.
பின், அவர் கூறியதாவது:
ஆன்மிக எழுத்தாளரான நான், ஆனந்த விகடனில் 28 ஆண்டுகளும், திரிசக்தியில் 3 ஆண்டுகளும் பணியாற்றி உள்ளேன். பழமையான கோவில்கள் சிறப்பு, மகான்கள் சமாதி என ஆன்மிகம் தொடர்பான நிறைய கட்டுரைகள் எழுதி உள்ளேன்.
காஞ்சி மகா பெரியவர் பற்றி கட்டுரை எழுதியது, என் வாழ்நாளில் மறக்க முடியாது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்து தமிழர்கள் மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க, கோவில்கள் பற்றி எடுத்து சொல்கிறேன். தினமலர் நாளிதழ் நிர்வாகத்துக்கும், எனக்கும் பல ஆண்டுகள் நட்புறவு உள்ளது.
மகா பெரியவா புத்தகத்தின் 1 முதல் 12 பாகங்கள், நிறைய ஆன்மிக புத்தகங்களை, கடல் தாமரை பதிப்பகத்திற்கு கொடுத்து உள்ளேன். உண்மையின் உரைகல், அயராத உழைப்பின் அடையாளமாக தினமலர் விளங்குகிறது.
கடல் தாமரை புத்தக பூங்கா, வீட்டில் உள்ள பூஜை அறைக்கு சமமானது. கடவுளுக்கு உருவம் உள்ளது; புத்தகத்திற்கு உருவம் இல்லை. ஆனால் புரட்டி பார்த்தால் பொக்கிஷம். கடைசி மரம் இருக்கும் வரை புத்தகம் இருக்கும் என்று, எழுத்தாளர் சுஜாதா கூறி உள்ளார். இங்குள்ள நுாலகத்தில் அறிவை வளர்க்கும் நிறைய புத்தகங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

