நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையை கலைத்துவிடுங்கள்! சுப்ரீம் கோர்ட்டில் மனு
நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையை கலைத்துவிடுங்கள்! சுப்ரீம் கோர்ட்டில் மனு
UPDATED : மே 17, 2026 11:56 AM
ADDED : மே 17, 2026 11:58 AM

புதுடில்லி:
மருத்துவ படிப்புகளுக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிந்து நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமையை கலைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுதும் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் என்.டி.ஏ., எனப்படும், தேசிய தேர்வு முகமை, இந்த தேர்வை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு கடந்த 3ம் தேதி நடந்தது. நாடு முழுதும் 23 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.
தேர்வு நடத்தும் முன், வினாத்தாள் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து நடந்து முடிந்த நீட் தேர்வை, தேசிய தேர்வு முகமை ரத்து செய்தது. 'மறுதேர்வு ஜூன் 21ம் தேதி நடத்தப்படும்' என, அறிவித்து, அதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடந்து வரும் நிலையில், இது வரை ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொடர் தோல்விகளை சந்தித்து வரும் தேசிய தேர்வு முகமையை உடனடியாக கலைக்க வேண்டும் அல்லது மறுசீரமைக்க வேண்டும் என கோரி, அகில இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வழக்கறிஞர் தன்வி துபே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய டாக்டர்கள் முன்னணி என்ற அமைப்பின் தலைவர் டாக்டர் லக்ஷய மிட்டல் என்பவர் சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
கோடிக்கணக்கான மாணவர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் ஒரு முதன்மை தேர்வு முகமை, 1860ம் ஆண்டின் சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ், தன்னாட்சி பெற்ற ஒரு தன்னார்வு தொண்டு நிறுவனம் போன்ற கட்டமைப்பில் இயங்குவது அநீதியானது.
மருத்துவ நுழைவுத் தேர்வில் தொடரும் முறைகேடுகள், இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கிய, சமத்துவ உரிமை மற்றும் வாழ்வாதாரத்திற்கான உரிமை ஆகியவற்றை நேரடியாக பறிப்பது போல உள்ளது.
நடப்பாண்டு நீட் நுழைவுத் தேர்வின் போது, வினாத்தாள் கசிந்ததால், 23 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புகூறல் இல்லாத, ஒரு சங்கப் பதிவு மாதிரியின் கீழ் இயங்கும் அமைப்பு மூலம், தேர்வை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கூடாது.
எனவே, தேசிய தேர்வு முகமையை உடனடியாக கலைத்துவிட்டு, பார்லி.,யின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் புதிய சட்டப்பூர்வ அந்தஸ்து கொண்ட தேசிய தேர்வு வாரியத்தை உருவாக்க வேண்டும். இதற்காக பார்லி.,யில் மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
புதிய அமைப்பானது சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கையாளரின், தணிக்கைக்கு உட்பட்டதாகவும், பலத்த சைபர் பாதுகாப்பு மற்றும் வினாத்தாள் கசிவு தடுப்பு பிரிவுகளை கொண்டதாகவும் இயங்க வேண்டும்.
எதிர்காலத்தில் நடக்கும் தேசிய அளவிலான தேர்வுகள் தங்கு தடையின்றி நுாறு சதவீதம் நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் தற்காலிக குழுவை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் அமைச்சரவை மாற்றம்?
'மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றப்படும். அதில், ஆறு அமைச்சர்களின் பதவிகள் பறிக்கப்படும்' என, டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 'நீட்' வினாத்தாள் கசிவுக்கு மத்திய கல்வி அமைச்சரின் செயல்பாடு தான் காரணம் என, எதிர்க்கட்சியினர் விமர்சிப்பதுடன், அவர் பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர்.
கல்வி அமைச்சராக இருப்பவர், ஒடிஷாவைச் சேர்ந்த பா.ஜ., மூத்த தலைவர் தர்மேந்திர பிரதான். 'வினாத்தாள் கசிவு முதன் முறையல்ல. 2017, 2021 மற்றும் 2024ம் ஆண்டிலும் நடந்துள்ளது' என சொல்கிறார், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.
'அமைச்சர் பிரதான் தன் துறையை கவனிக்காமல், ஒடிஷா அரசியல் மீதே அதிக கவனம் செலுத்துவதால் நீட் தேர்வில் கோட்டைவிட்டுவிட்டார்' என, நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தள நிர்வாகிகள் விமர்சிக்கின்றனர். ஒடிஷா முதல்வராக வேண்டும் என்பது, பிரதானின் நீண்ட நாளைய ஆசை. ஒடிஷாவில் பா.ஜ., வெற்றி பெற்ற போது, தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என, காத்திருந்தார் பிரதான். ஆனால், மோகன் சரண் மஜியை முதல்வராக்கினார் மோடி.
இந்த சூழலில், மத்திய அமைச்சரவை மாற்றப்படும் போது, தர்மேந்திர பிரதான் நீக்கப்படுவார் அல்லது அவரது துறை மாற்றப்படும் என, பா.ஜ., வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
புனேவைச் சேர்ந்த பேராசிரியை கைது
'நீட்' வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சுபம் கைனிகர், ராஜஸ்தானைச் சேர்ந்த தினேஷ் மங்கிலால் - பிவால் மங்கிலால் சகோதரர்கள் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வினாத்தாளை முதன்முதலில் கசியவிட்ட மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த முன்னாள் வேதியியல் பேராசிரியர் பி.வி.குல்கர்னியை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இந்நிலையில், புனேவைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியை மனிஷா மாந்தாரே நேற்று கைது செய்யப்பட்டார். இங்குள்ள 'மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி'யில் பணியாற்றி வந்த இவர், நீட் வினாத்தாள் தயாரிக்கும் குழுவில் இடம்பெற்றிருந்தார். இவரை, நீட் தேர்வு வினாத்தாள் தயாரிப்பு நிபுணராக என்.டி.ஏ., நியமித்திருந்தது.
வினாத்தாள்களை எளிதில் அணுகும் வசதி கொண்ட மனிஷா மாந்தாரே, இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மனிஷா வாண்டாரே என்ற பெண்ணின் உதவியுடன் நீட் தேர்வுக்கு பயிலும் மாணவர்களை அடையாளம் கண்டு, வினாத்தாளை கசியவிட்டது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, கடந்த மாத இறுதியில், சம்பந்தப்பட்ட மாணவர்களை தன் வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கு தாவரவியல் மற்றும் விலங்கியல் பிரிவுகளில் வரும் வினாக்களை தந்ததுடன் அதற்கான பதிலையும் தந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக, மாணவர்களிடம் அவர் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
