மத்திய அரசின் கல்வி திட்டங்கள் விழிப்புணர்வு: ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு
மத்திய அரசின் கல்வி திட்டங்கள் விழிப்புணர்வு: ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு
UPDATED : மே 26, 2026 01:55 PM
ADDED : மே 26, 2026 01:56 PM
சென்னை:
தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி, ஹிந்து மக்கள் கட்சி, வழக்கு தொடர்ந்துள்ளது.
ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
நாடு முழுதும், கடந்த 1986ம் ஆண்டு, காங்கிரஸ் ஆட்சியில், ஜவஹர் நவோதயா வித்யாலயா கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இருமொழிக் கொள்கை காரணமாக, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் கல்வி திட்டங்கள், தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மாணவர்களுக்க தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது.
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தின் வாயிலாக நல்ல பள்ளி வளாகம், காற்றோட்டமான வகுப்பறைகள், குடிநீர், கழிப்பறை, போக்குவரத்து என, அனைத்து வசதிகளும், அரசின் கல்வி நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஒன்று முதல் பிளஸ் 2 வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், தலா 1,000 ரூபாய் வங்கி கணக்குகளில், கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் தவறான முடிவு காரணமாக, மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையின் சமக்ர சிக்க்ஷா அபியான் திட்டத்தின் கீழ், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய, 2,100 கோடி ரூபாய் கிடைக்காமல் போய்விட்டது.
இது, தமிழக மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. எனவே, மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ., மற்றும் நவோதயா கல்வி திட்டங்களை, தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும்.
அமல்படுத்த மறுத்தால், இழப்பீடாக ஒவ்வொரு தமிழக மாணவருக்கும், 10 லட்சம் ரூபாயை, அவர்களின் வங்கி கணக்கில் முதலீடு செய்து, அதற்கான பத்திரம் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இது தொடர்பாக, மே 31ல் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், ஒலிபெருக்கி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு அளித்தும், இது வரை பரிசீலிக்கப்படவில்லை. அனுமதி கோரிய விண்ணப்பத்தை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
