மாநகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் பதவி உயர்வு வழங்க பட்டியல் அனுப்ப உத்தரவு
மாநகராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்கள் பதவி உயர்வு வழங்க பட்டியல் அனுப்ப உத்தரவு
UPDATED : மே 29, 2026 01:11 PM
ADDED : மே 29, 2026 01:12 PM
கோவை:
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் காலி பணியிடங்களை, பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்கான பட்டியல் தயாரித்து அனுப்ப கமிஷனர்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரக இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் மக்கள் தொகைக்கேற்ப, 2022ல் பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை (எண்: 152) வெளியிடப்பட்டது. சட்டசபை தேர்தல் சமயத்தில், மாநகராட்சிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு விதி தளர்வு செய்து, பதவி உயர்வு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக, கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதல்வர் விஜய் வசம் உள்ளது. துறை ரீதியாக அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்தி வருகின்றனர். அதில், காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்க, கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாக இயக்குனரகம் இணை இயக்குனர் (மாநகராட்சி), அனைத்து மாநகராட்சி கமிஷனர்களுக்கும் அனுப்பிய உத்தரவு:
மாநகராட்சிகளில் காலியாக உள்ள பொதுப்பிரிவு, பொறியியல் பிரிவு, நகரமைப்பு பிரிவு, சுகாதாரப் பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு கீழ்நிலை பணியிடங்களில் பணிபுரியும் தகுதியான பணியாளர்களுக்கு அடுத்த நிலையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
தகுதியானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் ஏதுமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். அப்பதவிகளுக்கான கல்வித்தகுதி, அடிப்படை பயிற்சிகள், துறை தேர்வுகள் மற்றும் விதிகளில் குறிப்பிட்டுள்ள இதர தகுதிகளை பெற்றுள்ளதை கருத்தில் கொண்டும், பிற அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் தேர்ந்தோர் பட்டியல் அடிப்படையில் காலி பணியிடங்களுக்கேற்ப பதவி உயர்வு வழங்க வேண்டும். அதன் அறிக்கையை ஜூன் 30க்குள் அனுப்ப வேண்டும்.
பதவி உயர்வு மற்றும் நேரடி பணி நியமனங்களுக்கான விகிதாச்சாரத்தை பின்பற்றி, அனைத்து பணியிடங்களுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும். தவறு நேர்ந்தால் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
