பாரதியார் பல்கலை - ராணுவப்பணி பயிற்சி கல்லூரி இடையே ஒப்பந்தம்
பாரதியார் பல்கலை - ராணுவப்பணி பயிற்சி கல்லூரி இடையே ஒப்பந்தம்
UPDATED : செப் 25, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: பாரதியார் பல்கலைக்கழகம் குன்னுõர் வெலிங்கடனில் உள்ள ராணுவப்பணி பயிற்சிக்கல்லூரி இடையே மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுள்ளன.
இந்த ஒப்பந்தத்தில் பல்கலை துணைவேந்தர் திருவாசகம், கல்லூரி கமான்டன்ட் குப்தா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
பாரதியார் பல்கலை துணைவேந்தர் திருவாசகம் கூறியதாவது:
இந்த ஒப்பந்தத்தின்படி எம்.எஸ்சி., (தேசிய பாதுகாப்பு), எம்.சி.ஏ., எம்.பி.ஏ., எம்.ஏ., (ஆங்கிலம், அரசியல் அறிவியல், இதழியல்) ஆகிய படிப்புக்களை நடத்த பாரதியார் பல்கலை ஒப்புதல் அளிக்கும். இந்த படிப்புக்களுக்கான பாடங்களை ராணுவப்பணி பயிற்சி கல்லூரி ஆசிரியர்கள் நடத்துவர்.
இந்த படிப்பை ராணுவக்கல்லூரியில் பயிற்சி பெறும் வீரர்கள் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மட்டுமே படிக்க முடியும். இக்கல்லூரியில் வெளிநாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பலரும் பயிற்சி பெறுகின்றனர். அவர்களும், பாரதியார் பல்கலை அளிக்கும் படிப்புக்களில் சேர முடியும்.
தொலைநிலைக்கல்வி முறையில் பி.எட்., எம்.எட், ஆகிய படிப்புக்களையும், பாரதியார் பல்கலை வழங்கவுள்ளது. இதற்கென ஒரு கல்வி மையம் ராணுவப்பணி பயிற்சி கல்லூரியில் நிறுவப்படவுள்ளது. இந்த ஒப்பந்தம், கல்லூரியில் எம்.பில்., பி.எச்.டி., படிப்புக்களை படிக்கவும் அனுமதி அளிக்கிறது. இவ்வாறு துணைவேந்தர் திருவாசகம் கூறினார்.
ராணுவப்பணி பயிற்சி கல்லூரியின் கமான்டன்ட் குப்தா கூறுகையில், “எங்களது கல்லூரியில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 500க்கும் மேற்பட்ட முப்படைகளைச் சேர்ந்த அதிகாரிகள் படித்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தின்படி, பாடம், தேர்வு அனைத்தும் கல்லூரியில் நடத்தப்படும். படிப்பு முடிந்தபின், பாரதியார் பல்கலை சான்றிதழ் வழங்கும்,” என்றார்.
