ஆசிரியர் நியமனம் - அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை
ஆசிரியர் நியமனம் - அரசின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை
UPDATED : செப் 05, 2014 12:00 AM
ADDED : செப் 05, 2014 11:44 AM
மதுரை: பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கு தனி நீதிபதி தடை விதித்ததை எதிர்த்து, அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்ததை, நேற்று அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க மறுத்து, மதுரை ஐகோர்ட் கிளை, இன்று(செப்டம்பர் 5) விசாரிக்க உள்ளது.
புதுக்கோட்டை, காதக்குறிச்சி, தமிழரசன் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் தேர்வில், வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால், பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த முறையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இதுபோல், மேலும் 17 பேர் மனு செய்திருந்தனர்.
இதை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதி, கவுன்சிலிங் நடத்த தடையில்லை. பணி நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தால், வேலையில் சேர தடை விதிக்கப்படுகிறது என, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதையடுத்து, மதுரை ஐகோர்ட் கிளையில், நீதிபதிகள் எம்.ஜெய்சந்திரன், ஆர்.மகாதேவன் அடங்கிய, பெஞ்ச் முன் நேற்று மாலை, அரசு அட்வகேட் ஜெனரல் சோமயாஜி ஆஜரானார்.
அட்வகேட் ஜெனரல்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்கிறோம். வெயிட்டேஜ் மதிப்பெண்ணை எதிர்த்து தாக்கலான வழக்கு, சென்னை ஐகோர்ட் பெஞ்சில் நிலுவையில் உள்ளது. அங்கு தடை விதிக்கப்படவில்லை. 10ம் வகுப்பு, பிளஸ் 2வில், ஆசிரியர்களை நியமிக்க வேண்டியுள்ளது. மேல்முறையீட்டு மனுவை, அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும்.
நீதிபதிகள் அளித்த உத்தரவில், "உரிய ஆவணங்கள் இன்றி, விசாரிக்க முடியாது. இன்று(செப்டம்பர் 5) விசாரணைக்கு எடுக்கப்படும்" என்றனர்.
