நாளை நடக்கிறது தினமலர் நீட் மாதிரித்தேர்வு; முன்பதிவு செய்தவர்கள் பங்கேற்கலாம்
நாளை நடக்கிறது தினமலர் நீட் மாதிரித்தேர்வு; முன்பதிவு செய்தவர்கள் பங்கேற்கலாம்
UPDATED : ஏப் 26, 2025 12:00 AM
ADDED : ஏப் 26, 2025 09:50 AM

மதுரை:
பிளஸ் 2 முடித்து மருத்துவ கனவில் உள்ள மாணவர்களுக்காக மதுரையில் தினமலர் நாளிதழ் - ஸ்டாரெட்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் நீட் மாதிரி நுழைவுத் தேர்வு பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் நாளை(ஏப். 27) காலை 10:00 மணி முதல் மதியம் 1:15 மணி வரை நடக்கிறது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ கனவில் உள்ள மாணவர்கள் நலன் கருதி தினமலர் சார்பில் இந்த மாதிரி தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டும் இதற்காக விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளைய டாக்டர் கனவு, நனவாகும் வகையில் மாணவர்களுக்கு இத்தேர்வு மூலம் தினமலர் வழிகாட்டுகிறது. நீட் மெயின் தேர்வை எதிர்நோக்கியுள்ள மாணவர்கள், தங்களை தாங்களே சுயமாக பரிசோதித்துக்கொள்ள மாதிரித்தேர்வு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
மாணவர்கள் கவனத்திற்கு
இத்தேர்வில் பங்கேற்க விரும்பி முன்பதிவு செய்துள்ள மாணவர்கள், காலை 9:30 மணிக்கு மதுரை பசுமலை மன்னர் கல்லுாரிக்கு வர வேண்டும். காலை 9:45 மணிக்கு தேர்வு அறைக்குள் இருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் தேர்வு நடத்தப்படும். மாணவர்கள் நீலம் அல்லது கறுப்பு பால்பாயின்ட் பேனா கொண்டுவர வேண்டும்.
அரசு நடத்தும் நீட் தேர்வு போன்றே இந்த மாதிரித்தேர்வு நடப்பதால், இதில் மாணவர்கள் சரியாக பங்கேற்று, விதிமுறைகள் படி தேர்வை எழுதினால் அது அவர்களுக்கு அரசின் நீட் தேர்வை எதிர்கொள்ள நல்ல வழிகாட்டியாக அமையும். அந்த தேர்வு எழுதும் அச்சத்தை இந்த மாதிரி தேர்வு போக்கும்.
ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
மாதிரித்தேர்வில் டாப் 20 இடங்கள் பெறுபவர்கள் மதிப்பெண் ஏப்.,29 தினமலர் நாளிதழில் வெளியாகும். மற்றவர்களின் வெற்றி விபரம் ஸ்டாரெட்ஸ் நிறுவன இணையதளத்தில் (www.staretsacademy.com) வெளியிடப்படும்.

