மாணவி புகார் தராததால் வழக்கு பதியவில்லை எஸ்.பி., அலுவலகம் விளக்கம்
மாணவி புகார் தராததால் வழக்கு பதியவில்லை எஸ்.பி., அலுவலகம் விளக்கம்
UPDATED : அக் 13, 2025 07:37 AM
ADDED : அக் 13, 2025 07:39 AM
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியரை தாக்கிய சம்பவத்தில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் மாணவி புகார் தராததால் வழக்கு பதிவு செய்யவில்லை என எஸ்.பி., அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
சேரன்மகாதேவியில் ஸ்காட் இன்ஜினியரிங் கல்லுாரி செயல்படுகிறது. அங்கு மின்னணுவியல் துறை துணை பேராசிரியர் சாமுவேல் ராஜ் 37, மாணவர்களை இண்டஸ்ட்ரியல் சுற்றுலாவிற்கு கேரள மாநிலம் மூணாறு அழைத்து சென்றார்.
அப்போது சாமுவேல் ராஜ் ஒரு மாணவிக்கு தொல்லை தந்ததாக கூறப்பட்டது. ஆனால் மாணவிகள் யாரும் புகார் தரவில்லை. சுற்றுலா சென்று வந்த பிறகு கல்லுாரியில் வைத்து மாணவர்கள் சிலர் சாமுவேல் ராஜை தாக்கினர்.
இதில் காயமுற்றவர் புகார் தரவில்லை. சேரன்மகாதேவி போலீசார் தாங்களாக வழக்கு பதிவு செய்து மாணவர்கள் சுஜின் 19, ஷேக் முகமது மைதீன் 20, முத்துராஜ் 20, ஸ்ரீதர் 20 ஆகியோரை கைது செய்தனர்.
மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சக மாணவர்கள் கல்லுாரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜான் சாமுவேல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனிடைய எஸ்.பி., சிலம்பரசன் அலுவலகம் சார்பில் ஒரு மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஜான் சாமுவேல் ராஜை, மாணவர்கள் தாக்கிய சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். சாமுவேல் ராஜ் மாணவர்களை கேரளாவுக்கு அழைத்துச் சென்றபோது மாணவிக்கு தொல்லை தந்ததாக மாணவர்கள் தரப்பில் அவர் மீது அதிருப்தியில் இருந்தனர்.
இது தொடர்பாக அந்த மாணவியை அவரது பெற்றோருடன் விசாரணை செய்ததில் மாணவி அது போன்ற எந்த தொந்தரவும் தனக்கு தரப்படவில்லை என்றும் தான் புகார் அளிக்க விருப்பமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி மற்றும் அவர் தரப்பிலிருந்து சாமுவேல் ராஜ் மீது புகார் மனு எதுவும் வரவில்லை.
இதில் சாமுவேல் ராஜ் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ., மற்றும் இந்திய மாணவர் சங்கம் சமூக வலைத்தளங்களில் போலீசை விமர்சித்து பரப்பி வருகின்றனர். இது சட்டவிரோத செயலாகும்.
எஸ்.டி.பி.ஐ., அமைப்பினர் போலீஸ் துறைக்கு எதிராக அவதுாறு பரப்பி கண்ணியக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர். இது சட்டத்திற்கு விரோதமான செயலாகவும். இது போன்ற செயல்கள் சட்டப்படி நடவடிக்கைக்கு உள்ளாகும் எனவும் தெரிவித்துள்ளது.