சமூக வலைதளங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும்: பிரான்ஸ் அதிபர்
சமூக வலைதளங்களை பயன்படுத்த குழந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும்: பிரான்ஸ் அதிபர்
UPDATED : பிப் 21, 2026 02:58 PM
ADDED : பிப் 21, 2026 02:59 PM
“இந்தியாவில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்,” என ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடந்து வரும் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப தாக்கத்தின் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பங்கேற்று பேசியதாவது:
ஏ.ஐ., தொழில் நுட்பத்தால் ஏற்படும் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதே பிரான்ஸின் முக்கிய குறிக்கோள். எனவே, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப் போகிறோம்.
ஸ்பெயின் அரசும் குழந்தைகளை பாதுகாக்க இப்படியொரு நடவடிக்கையை எடுக்கப் போகிறது. அந்த வரிசையில் குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினரை பாதுகாக்க இந்தியாவும் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.
இணையதளமும், சமூக வலைதளமும் குழந்தைகளுக்கு கிடைக்காத வகையில் பாதுகாப்பாக இருப்பதை அரசுகளும், கட்டுப்பாட்டு அமைப்புகளும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரான்ஸில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதை தடை விதிக்கும் வகையிலான மசோதாவை கொண்டு வர, கடந்த மாதம் அந்நாட்டு அரசு ஒப்புதல் தெரிவித்தது. இம்மசோதா, விரைவில் சட்டமாக்கப்பட உள்ளது.

