அரசு பள்ளி மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி வினா போட்டி
அரசு பள்ளி மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி வினா போட்டி
UPDATED : மார் 04, 2026 11:16 AM
ADDED : மார் 04, 2026 11:18 AM

தியாகதுருகம்:
தியாகதுருகம் அடுத்த சின்னமாம்பட்டு, உதயமாம்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் முகுந்தன் உத்தரவுப்படி, அரசு பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தீ பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி மாவட்டத்தில் உள்ள 12 தீயணைப்பு நிலையங்கள் சார்பில் அந்தந்த பகுதி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையில், உதயமாம்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சுசீலா முன்னிலையில் 30 மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடந்தது. அதில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 5 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதே போல் சின்னமாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசுதா முன்னிலையில் 30 மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தி சிறப்பு மதிப்பெண் பெற்ற 5 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

