பணம் கொடுத்து வேலை என்றால் உஷார்! சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
பணம் கொடுத்து வேலை என்றால் உஷார்! சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
UPDATED : ஏப் 06, 2026 09:55 AM
ADDED : ஏப் 06, 2026 09:57 AM

கோவை:
கல்லுாரி படிப்பை முடிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் ஆன்லைன் வாயிலாக வேலைத்தேடும் போது கவனமாக இருக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
மாநகர கமிஷனர் அலுவலகத்தில், சைபர் கிரைம் யூனிட் தனியாக செயல்படுகிறது. அந்த வளாகத்தில் தினந்தோறும் அதிக கூட்டம் காணப்படும் பிரிவு இது தான். அந்தளவுக்கு சைபர் குற்றங்களில் ஏமாந்தவர்கள் அதிகரித்து வருகின்றனர்.
சைபர் கிரைம் பிரிவில் 2026 மார்ச் இறுதி வரை பதிவான, 2,234 புகார்களில், 1765 நிதி சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
“சைபர் கிரைம் குற்றங்களில் நிதிசார்ந்த குற்றங்கள் அதிகம். அதிலும், டிஜிட்டல் அரெஸ்ட், பண முதலீடு, வேலை ஆகிய மூன்று பிரிவுகளில் தான் அதிகம் ஏமாற்றப்படுகின்றனர். சாதாரண அரெஸ்ட் தான் இருக்கிறது; டிஜிட்டல் அரெஸ்ட் என்ற ஒன்று இல்லை.
பேராசை காரணமாகவே பலர் ஏமாற்றப்படுகின்றனர். தெரியாத நிறுவனம், தெரியாத பொருட்கள் மீது அவசரப்பட்டு முதலீடு செய்யக்கூடாது,” என்கிறார், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி.
வீட்டில் இருந்தே வேலை, தினமும் ஆயிரத்தில் சம்பளம், பகுதி நேர வேலை, டாஸ்க் பேஸ் வேலை எனக்கூறி முதலில் சிறிய தொகை கொடுத்து நம்ப வைத்து, பின்னர் பெரிய தொகை கேட்பது அனைத்தும் மோசடியில் முடிவதை கடந்த காலங்களில் கோவை மக்கள் சிலர் அனுபவித்துள்ளனர். ஆனாலும் ஏமாறுபவர்கள் இன்னும் இருக்கின்றனர்.
“பல மடங்கு வருமானம், லாபம் என்றாலே உஷாராக கவனிக்க வேண்டும். குறிப்பாக, வேலை தேடுபவர்கள் சரியான தளங்களில் பதிவுகளை செய்ய வேண்டும். கட்டணம் செலுத்தினால் வேலை, ஆட்களை சேர்த்துவிடுவது, பணம் கட்டி பணம் பெறுதல் போன்ற வலைகளில் சிக்க வேண்டாம்,” என்று முடித்தார் கவிதாலட்சுமி.

