மாணவர்கள் நாளிதழ் படிப்பது கட்டாயம் கர்நாடக கல்வி துறை அதிரடி உத்தரவு
மாணவர்கள் நாளிதழ் படிப்பது கட்டாயம் கர்நாடக கல்வி துறை அதிரடி உத்தரவு
UPDATED : ஏப் 27, 2026 07:02 PM
ADDED : ஏப் 27, 2026 07:04 PM
பெங்களூரு:
மாநிலத்தின் அனைத்து பள்ளிகளில், சிறார்கள் தினமும் கன்னட நாளிதழ் படிப்பதை கட்டாயமாக்கி, கர்நாடக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், மாணவர்கள் மொபைல் போன், சமூக வலைதளங்கள் பயன்பாட்டில், அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொழுது போக்குக்கு அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது அவர்களின் உடல் ஆரோக்கியம், மன நிலையை பாதிக்கிறது.
அதிகமான நேரம் மொபைல் போன் பயன்படுத்துவதால், மாணவர்களின் கண் பார்வை, ஞாபக சக்தி குறையும். காது கேளாமை ஏற்படும். உடல், மன வளர்ச்சி தடைபடும். உடலை பலப்படுத்த உதவும் விளையாட்டிலும், ஆர்வம் இல்லாதது தெரிய வந்துள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில், பள்ளிகளில் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் கன்னட நாளிதழ் படிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், கல்வித்துறைக்கு சிபாரிசு செய்துள்ளது.
இதை ஏற்றுக்கொண்டு கல்வித்துறையும், அரசு பள்ளிகளில் மாணவர்கள் தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வரை, கன்னட நாளிதழ் படிப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த உத்தரவு அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், பல்வேறு துறைகள் நடத்தும் உறைவிட பள்ளிகள், விடுதிகள், சிறார்கள் காப்பகங்களுக்கும் பொருந்தும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்வித்துறையின் உத்தரவை, கல்வி வல்லுநர்கள் வரவேற்றுள்ளனர். 'நாளிதழ்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள், பாட புத்தகங்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளை விட, மாறுபட்டதாக இருக்கும். நாளிதழ் வாசிப்பதால், சிறார்களின் செவிகளின் திறன் மேம்படும். எழுத்து திறனும் அதிகரிக்கும்.
'அதுமட்டுமின்றி நாளிதழ்களை படிப்பது, நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை, தெரிந்து கொள்ள உதவும். இன்றைய சிறார்கள் டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர, உலக அறிவும் அவசியம். எனவே நாளிதழ் படிப்பது நல்லது' என, கருத்து தெரிவித்துள்ளனர்.

