தமிழகம், மே.வங்கத்தில் பி.எம்., ஸ்ரீ பள்ளி தலைமை செயலர்களுக்கு விரைவில் கடிதம்
தமிழகம், மே.வங்கத்தில் பி.எம்., ஸ்ரீ பள்ளி தலைமை செயலர்களுக்கு விரைவில் கடிதம்
UPDATED : மே 08, 2026 08:21 AM
ADDED : மே 08, 2026 08:27 AM

புதுடில்லி:
மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் ஆட்சி மாறி இருக்கும் சூழலில், முடங்கி கிடக்கும் பி.எம்., ஸ்ரீ பள்ளித் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட கோரி, இரு மாநில தலைமை செயலர்களுக்கும் விரைவில் கடிதம் எழுதவுள்ளது.
தேசிய கல்வி கொள்கையின் கீழ், நாடு முழுதும் 14,500 அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தும் பி.எம்.,ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
வடமாநிலங்களில் பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில், இத்திட்டம் அமலாகி உள்ளது.
எதிர்ப்பு
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில், இதற்கு முன் ஆட்சியில் இருந்த தி.மு.க., - திரிணமுல் காங்., இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் ஆட்சி மாறி இருக்கும் சூழலில், பி.எம்., ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக, இரு மாநில தலைமைச் செயலர்களுக்கும் விரைவில் மத்திய அரசு கடிதம் அனுப்பி வைக்கவுள்ளது.
இது குறித்து மத்திய உயரதிகாரிகள் கூறுகையில், “ஓரிரு நாளில், மத்திய அரசு கடிதம் அனுப்பவுள்ளது. பி.எம்., ஸ்ரீ திட்டத்தை விரைந்து அமல்படுத்தும் வகையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தவுள்ளது.
இரு மாநிலங்களிலும் பி.எம்.,ஸ்ரீ திட்டம் நிச்சயம் அமலாகும்” என நம்பிக்கை தெரிவித்தனர்.
கருவி
முன்னதாக, பி.எம்.,ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத மாநிலங்களுக்கு 2024 - 25ம் நிதியாண்டுக்கான, 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது.
பி.எம்.,ஸ்ரீ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை பெற வேண்டுமெனில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம்.
ஆனால், எதிர்க்கட்சிகளோ, தேசிய கல்வி கொள்கை போன்ற மத்திய திட்டங்களை மாநிலங்கள் மீது திணிக்கும் நோக்கில், கல்விக்கான நிதியை மத்திய அரசு ஒரு கருவியாக பயன்படுத்தி வருகிறது என குற்றஞ்சாட்டுகின்றன.
