திசுக்களில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் ஹைட்ரோ ஜெல் சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்
திசுக்களில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தும் ஹைட்ரோ ஜெல் சென்னை ஐ.ஐ.டி., உருவாக்கம்
UPDATED : மே 30, 2026 10:05 AM
ADDED : மே 30, 2026 10:16 AM

சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.,யின் உயிரி தொழில்நுட்பதுறை ஆய்வகத்தில், 'பைப்ரோசிஸ்' எனும் திசுக்களில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சை முறை குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன் பயனாக, திசுக்களில் ஏற்படும் காயங்களை குணப்படுத்த, ஊசி வழியே செலுத்தக்கூடிய ஹைட்ரோ ஜெல்லை, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து, சென்னை ஐ.ஐ.டி., உயிரி தொழில்நுட்பதுறை பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன் கூறியதாவது:
நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பகுதிகளில் ஏற்படும் 'பைப்ரோசிஸ்' நோய்கள், உலகளவில் ஏற்படும் மரணங்களில் 45 சதவீதத்துக்கு காரணமாக உள்ளன.
தற்போது, பைப்ரோசிஸ் திசு காய நோய்களுக்கு, நீண்ட காலம் மருந்துகள் உட்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால், கடும் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன.
இதற்கு தீர்வு காணும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி., ஈடுபட்டது. அதன்படி, ஊசி வழியே செலுத்தும் ஜெல் உருவாக்கப்பட்டுள்ளது.
பட்டுப்பூச்சி கூடுகள், கடற்பாசிகளில் இருந்து பெறப்பட்ட இயற்கையான உயிரி பொருட்களின் கலவையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ஒரு மருந்தை ஏற்றி, திசுவில் ஏற்படும் காயங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
இது, ஆய்வக வெப்பநிலையில் திரவத்தன்மையுடன் இருக்கும். அதுவே, உடலில் செலுத்தும் போது, ஒரு களிமமாக மாறிவிடும். காயம் ஏற்பட்ட பகுதிகளில் மட்டும் இதை பயன்படுத்தி சிகிச்சை அளிக்க முடியும்.
முதல்கட்ட ஆராய்ச்சியில் நல்ல முன்னேற்றம் கிடைத்துள்ளது. விரைவில், இந்த ஆராய்ச்சியை முழுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
